திருவள்ளூர் தனி தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து வாக்கு சேகரிக்க சென்ற திருவள்ளூர் தொகுதி திமுக எம்.எல்.ஏ.விடம் வாக்காளர்கள் கேள்வி கேட்க, அவர் வாக்காளர்களிடம் சவால் விட்டுப் பேசியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருவள்ளூர் தனி தொகுதியில் போட்டியிடும் திமுக கூட்டணி காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த் செந்தில் இன்று திருவள்ளூர் சட்டமன்ற தொகுதி கடம்பத்தூர் ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். தொடர்ந்து உளுந்தை கிராமத்தில் வாக்கு சேகரிக்க வேட்பாளர் சசிகாந்த் செந்திலுடன் திருவள்ளூர் எம்எல்ஏ வி.ஜி. ராஜேந்திரன் மற்றும் கூட்டணி கட்சியை நிர்வாகிகள் வந்திருந்தனர். அப்போது எம்எல்ஏ வி.ஜி ராஜேந்திரன் பேச ஆரம்பித்தபோது, எம்எல்ஏவாக இருந்து நீங்கள் என்ன செய்தீர்கள்? எதுவுமே செய்யாத நீங்கள் எப்படி இங்கு ஓட்டு கேட்டு வருகிறீர்கள் என ஆவேசத்துடன் கேட்க ஆரம்பித்தனர்.
இதனால் கோபமடைந்த எம் எல் ஏ வி ஜி ராஜேந்திரன், தைரியம் இருந்தால், திராணி இருந்தால் இங்கே வந்து பேசுங்கள்… என சொல்லியபடி இந்த சாலையை போட்டது நாங்கள் தான் இந்த டேங்க்கை கட்டிக் கொடுத்தது நாங்கள் தான் என்று தெரிவித்தார். ஆனால் பொதுமக்கள், ஊர் தலைவருக்கு ஒரு பிரச்சனை வந்த போது ஏன் நீங்கள் அதில் தலையிடாமல் இருந்துவிட்டு இப்பொழுது எப்படி ஓட்டு கேட்க வரலாம் என ஆவேசமாக பேசவே அங்கிருந்து புறப்பட்டனர். இருப்பினும் திமுக ஆதரவாளர்கள் கிராமத்தில் எதிர்த்து குரல் கொடுத்தவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் மேலும் பரபரப்பாக காணப்பட்டது.