தமிழகத்தில் வருகின்ற 19ஆம் தேதி உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இதனையடுத்து உள்ளாட்சியில் போட்டியிடும் வேட்பாளர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுவருகின்றனர். இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் 24 வார்டுகளில் 140 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
இதனையடுத்து திமுக கூட்டணி கட்சியில் போட்டியிடும் 24 வேட்பாளர்களை ஆதரித்து சீனிவாசபுரம், எம்.எம்.தெரு,அண்ணாநகர்,நாயுடுபுரம்,பேருந்துநிலையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பழனி சட்டமன்ற உறுப்பினர் ஐ.பி.செந்தில்குமார் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் வேலுச்சாமி உள்ளிட்டோர் தெருமுனை பிரசாரத்தில் ஈடுபட்டனர். இதில் கொடைக்கானல் மலை பகுதிகளில் பட்டா இல்லாத நிலங்களுக்கு விரைவில் பட்டா வழங்குவதற்கு முயற்சி செய்யப்படும் எனவும், கொடைக்கானலில் 24 வார்டுகளில் திமுக கூட்டணி கட்சி சார்பில் 14 பெண்கள் போட்டியிடுகின்றனர் என்றும், பெண்களுக்கு சொத்தில் சம உரிமை வழங்குவதற்கு சட்டம் இயற்றியவரும் ,பெண்கள் வாழ்வாதாரத்தில் முன்னேறுவதற்கு மகளிர் சுய உதவி குழுவை உருவாக்கியதும் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி என்றும் தெரிவித்தார்.
மேலும் பெண்கள் சுய உதவி குழுவிற்கு 20,000கோடி கடன் வழங்குவதற்கும் இந்த ஆட்சி செயல்படுகிறது என்றும் பெண்களுக்கான ஆட்சியாக இந்த திமுக ஆட்சி இருப்பதாக பழனி சட்டமன்ற உறுப்பினர் பிரச்சாரம் செய்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். இந்த தேர்தல் பிரசாரத்தில் ஏராளமான கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.