• Fri. Apr 26th, 2024

விரைவில் தமிழகத்தில் மாற்றம் வரும் – ஓபிஎஸ்!

திமுக அரசின் செயல்பாடுகளை பார்த்து இன்னும் 4 ஆண்டுகளுக்கு மக்கள் பொறுக்க மாட்டார்கள் என்றும், விரைவில் தமிழகத்தில் மாற்றம் வரும் எனவும் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் பேசியுள்ளார்.

மதுரை மாநகராட்சியில் அதிமுக சார்பில் போட்டியிடும் 100 வேட்பாளர்களுக்கு வாக்கு கேட்டு அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் பழங்காநத்தம் பகுதியில் பிரச்சாரம் செய்தார்.

ஓ.பன்னீர்செல்வம் பேசுகையில், ‘ஆட்சிக்கு வந்தவுடன் நீட் ரத்து முதல் கையெழுத்து என்றார் ஸ்டாலின். நீட் ரத்துக்கு கையெழுத்து போடும் அதிகாரம் உள்ளவர் ஜனாதிபதி தான். ஆனால், ஸ்டாலின் பத்து மாதமாக கையெழுத்து போட்டுக் கொண்டு இருக்கிறார். நீட் ரத்தாகவில்லை. மகளிருக்கு 1000 ரூபாய் தருவதாக சொல்லி ஏமாற்றி விட்டார்கள். நகைகடன் தள்ளுபடி விவகாரத்தில், 35 லட்சம் மக்களை ஏமாற்றி விட்டது திமுக அரசு. பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவதிலும், நிதியை வழங்காமல், தரமற்ற பொருட்களை வழங்கியும் ஏமாற்றி விட்டார்கள்.

இதையெல்லாம் பார்த்து இன்னும் 4 ஆண்டுகள் மக்கள் பொறுக்க மாட்டார்கள். உறுதியாக மாற்றம் வரும், விரைவில் புரட்சி ஏற்படும். திமுக அரசை வீட்டுக்கு அனுப்பும் வரை மக்கள் ஓய மாட்டார்கள். பத்து மாதங்களாக மக்களுக்கு எதுவும் செய்யவில்லை. இவ்வளவு குறுகிய காலத்திலேயே மக்களிடம் பெரும் வெறுப்பை சம்பாதித்தது திமுக அரசு தான்.

பிரச்சார கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசுகையில், கொலை நகரமாக இருந்த மதுரையை கோவில் நகரமாகவே மாற்றிக் காட்டியது அதிமுக ஆட்சி. எடப்பாடி பழனிச்சாமி கேள்விகளுக்கு பதில் சொல்ல திராணி இல்லாமல் காணொளி காட்சி வாயிலாக பரப்புரை மேற்கொள்கிறார் முதல்வர்.

பொங்கல் பரிசு தொகுப்பு முறையாக வழங்கப்படவில்லை. அதில், ரேஷன் கடையில் கொடுத்த மண்டவெல்லம் வீட்டிற்கு வந்த போது காணவில்லை என காவல் நிலையத்தில் புகார் அளித்தோம்.
பொங்கல் பரிசை கூட சரியாக கொடுக்க முடியாத அரசை தான் இன்று முடக்க வேண்டும் என்று சொல்கிறோம்.

முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பேசுகையில், சட்டமன்றத்தை முடக்கி பாருங்கள் என உதயநிதி ஸ்டாலின் சவால் விடுகிறார். அப்படியெல்லாம் சவால் விடாதீர்கள் தம்பி, ஏற்கனவே இரண்டு முறை திமுக ஆட்சி கலைக்கப்பட்டு உள்ளது.

தம்பி உதயநிதி உங்களுக்கு தெரியாது, ஆட்சி கலைக்கப்பட்ட பிறகு திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்ததே கிடையாது. இப்போது பிரதமராக மோடி இருக்கிறார். ஏதாவது பேசி உங்கள் அப்பா ஸ்டாலின் ஆட்சிக்கு மோசம் செய்து விடாதே தம்பி. திமுக அரசினர் வாயிலேயே அல்வா, வடை, தோசை எல்லாம் சுடுவார்கள். இது அவர்களின் பாணி. தேர்தல் தோறும் வாக்குறுதிகள் சொல்லி விட்டு எதையும் நிறைவேற்ற மாட்டார்கள். இதையெல்லாம் மனதில் வைத்து, மக்கள் இந்த தேர்தலில் திமுகவினருக்கு அல்வா கொடுக்க வேண்டும்.’ என்றார்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *