சிவகங்கை மாவட்டம், சிவகங்கை ஆட்சியர் அலுவலகத்தில் தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருக்கும் போலீசாருக்கு தண்ணீர் பாட்டில் இல்லாமல் வெறும் 300 கிராம் அளவில் தயிர்சாதம் மட்டுமே வழங்கப்பட்டதால் போதுமான அளவில் இல்லாததால் காவல்துறையினர் பெரும் அவதிக்குள்ளாகினர்.
சிவகங்கை நாடாளுமன்ற தொகுதிக்கான மாவட்ட தேர்தல் அலுவலர் ஆட்சியர் ஆஷா அஜித் ஆவார். இந்நிலையில் அவரது அலுவலகத்தில் 90க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தேர்தல் பணிக்குழு சார்பில் மதிய உணவு அளிக்கப்பட்டது. அதில் வெறும் 300 கிராம் அளவில் தயிர் சாதம் மட்டுமே அளிக்கப்பட்டதுடன் குடிக்க தண்ணீர் பாட்டில் கூட வழங்கப்படவில்லை. இதனால் பாதுகாப்பு பணியிலிருந்த காவலர்கள் பெரும் பாதிப்பை சந்தித்தனர். வெயிலில் நின்று பணியில் ஈடுபடும் காவலர்களுக்கு முறையான உணவு வழங்காமலும் தாகத்திற்கு கூட தண்ணீர் வழங்காமலும் காவலர்களை தவிக்க விட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.