தைபூசத் திருநாளை முன்னிட்டு மயிலாடுதுறையில் மலைக்கோயில் எனப்படும் தண்டாயுதபாணி முருகன் கோயிலுக்கு அலகு குத்தியும், பால்குடம் சுமந்தும் ஏராளமான பக்தர்கள் பாத யாத்திரையாக சென்று நேர்த்திக்கடன் செலுத்தி வழிபாடு!
தமிழகத்தில் நாளுக்குநாள் அதிகரித்துவரும் கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த மாநில அரசு பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகளை அறிவித்துள்ளது. அவ்வகையில், தை மாதம் 1-ஆம் தேதி முதல் 5-ஆம் தேதி வரை பொங்கல் விழா, தைப்பூச விழாவில் பக்தர்கள் கூடுவதைத் தவிர்க்கும் விதமாக கோயில்களுக்கு பக்தர்கள் செல்ல தடைவிதிக்கப்பட்டுள்ளது. இதனால், மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த 4 நாட்களாக அனைத்துக் கோயில்களும் மூடப்பட்டு, பக்தர்களின் தரிசனத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மயிலாடுதுறையில் மலைக்கோயில் எனப்படும் தண்டாயுதபாணி முருகன் கோயிலில் இன்று தைபூச திருவிழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி, மயிலாடுதுறை காவிரி துலாக்கட்டத்தில் இருந்து, நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் நாக்கில் அலகு குத்தியும், பால் குடம் எடுத்தும் நகரின் முக்கிய வீதிகளின் வழியாக பாத யாத்திரையாக கோயிலை அடைந்தனர். தொடர்ந்து, கோயிலில் தண்டாயுதபாணிக்கு பால் அபிஷேகம் செய்து, சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது.