விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூர் அருகேயுள்ள மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் அமைந்துள்ளது, பிரசித்தி பெற்ற சதுரகிரிமலை, சுந்தரமகாலிங்கம் சுவாமி கோவில். இன்று ஆனி மாத வளர்பிறை பிரதோஷத்தை முன்னிட்டு, பக்தர்கள் மலைக் கோவிலுக்குச் சென்று சுவாமி தரிசனம் செய்வதற்கு வனத்துறையினர் அனுமதி வழங்கினர். அதிகாலையிலேயே ஏராளமான பக்தர்கள் தாணிப்பாறை அடிவாரப் பகுதியில் குவிந்தனர். வழக்கமாக காலை 7 மணிக்கு மேல் பக்தர்கள் மலைக் கோவிலுக்குச் செல்ல அனுமதிக்கப்படுவார்கள். இன்று காலை பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்ததாலும், அதிகாலையில் சூரிய வெளிச்சம் நன்றாக இருந்ததாலும், காலை 6 மணியிலிருந்தே பக்தர்கள் சுந்தரமகாலிங்கம் சுவாமி கோவிலுக்குச் செல்ல அனுமதிக்கப்பட்டனர். இன்று சனி கிழமை வளர்பிறை பிரதோஷம் என்பதால், சதுரகிரிமலையில் வழக்கத்தை விட பக்தர்கள் கூட்டம் சற்று அதிகமாக இருந்தது. பிரதோஷத்தை முன்னிட்டு சுந்தரமகாலிங்கம் சுவாமி மற்றும் சந்தனமகாலிங்கம் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன. சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய சுந்தரமகாலிங்கம் சுவாமியை ஏராளமான பக்தர்கள் கண்குளிர தரிசனம் செய்தனர்.
