கோவை குனியமுத்தூர் அருகே பழைய பிளாஸ்டிக் குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒரு லட்சம் மதிப்பிலான பிளாஸ்டிக் பொருட்கள் எரிந்து தீக்கரியாகின.
கோவை குனியமுத்தூர் சுண்டக்காமுத்தூர் சாலையில் மோகன்ராஜ் என்பவர் பழைய பிளாஸ்டிக் பொருட்கள் வைக்கும் குடோன் நடத்தி வருகிறார். இந்நிலையில் இன்று மதியம் திடீரென குடோனில் தீ விபத்து ஏற்பட்ட நிலையில் அருகில் இருந்தவர்கள் உடனடியாக வெளியேறிய நிலையில், வெயில் காரணமாக பிளாஸ்டிக் பொருட்கள் மலமலவென பற்றி எரிந்தது. இதன் காரணமாக அப்பகுதியில் புகைமூட்டம் ஏற்பட்ட நிலையில் அக்கம்பக்கத்தினர் உடனடியாக தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளித்தனர். அதன் பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த கோவைப்புதூர் தீயணைப்புத் துறையினர் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். மேலும் இந்த தீ விபத்தில் ஒரு லட்சம் ரூபாய் மதிப்பிலான பிளாஸ்டிக் பொருட்கள் முற்றிலும் தீயில் எரிந்து தீக்கரியாகின. இந்த தீ விபத்தின் போது அதிர்ஷ்டவசமாக பணியாளர்கள் யாரும் இல்லாத நிலையில் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இது குறித்த தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்கு விரைந்த குனியமுத்தூர் போலீசார் மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.