சிவகாசி, ஸ்ரீ காளீஸ்வரி கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் வணிகவியல் துறை சார்பில் இளங்கலை இரண்டாம் மற்றும் மூன்றாமாண்டு மாணவர்களுக்கான பெற்றோர் ஆசிரியர் சந்திப்பு கூட்டம் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் 75 பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

நிகழ்வின் தொடக்கமாக, வணிகத்துறை உதவிப்பேராசிரியை கிருத்திகா வரவேற்று பேசினார். துறைத்தலைவர் குருசாமி நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்கினார். அவர் தனது உரையில், இரண்டாம் மற்றும் நான்காம் பருவத்தேர்வின் மதிப்பெண் அறிக்கைகள் மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக பெற்றோர்களிடம் அவர் தெரிவித்தார். மேலும் தேர்வில் தோல்வி அடைந்த மாணவர்கள் தேர்ச்சி பெற கடுமையாக உழைக்க வேண்டுமென்றும் அவர்கள் மீது பெற்றோர்கள் கூடுதல் கவனம் எடுத்துக் கொள்ள வேண்மென்றும் கூறினார்.
அதனைத் தொடர்ந்து, உதவிப்பேராசிரியர்கள.அழகுலட்சுமி மற்றும் மதிவதனா ஆகியோர் மாணவர்கள் கல்லூரிக்கு வரும்போது உடைக் கட்டுப்பாட்டை முறையாகக் கடைப்பிடிக்க வேண்டும் என்றும், தினமும் காலை உணவை கட்டாயம் உட்கொண்டு வர வேண்டும் என்றும் அறிவுறுத்தினர்.

உதவி பேராசிரியர் பாபு பிராங்க்ளின், மாணவர்கள் கல்லூரிக்கு அலைபேசி கொண்டு வருவதைத் தவிர்க்க வேண்டும் வலியுறுத்தினார். உதவிப்பேராசிரியர் மலைநம்பிராஜன்,சாலை விபத்துகளைத் தவிர்க்க மாணவர்கள் இருசக்கர வாகனங்களில் வரும் போது கட்டாயம் தலைக்கவசம் அணிய வேண்டும் என்று அறிவுறுத்தினார். குலோத்துங்க பாண்டியன் பேசுகையில், பெற்றோர்கள் தங்களது குழந்தைகளின் கல்வி முன்னேற்றம், ஒழுக்கம் மற்றும் பொது நடத்தை குறித்து அறிந்து கொள்ள அவ்வப்போது கல்லூரிக்கு வருகை தந்து,வகுப்பு ஆசிரியர்களுடன் கலந்தாலோசிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
வணிகத்துறை உதவிப் பேராசிரியர். ராஜீவ் காந்தி நன்றி கூறினார். நிகழ்ச்சிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் வணிகத்துறை உதவிப் பேராசிரியர் கிருத்திகா செய்திருந்தார்.





