சென்னை கண்ணகி நகரில் நேற்று கலைஞரின் வருமுன் காப்போம் திட்டத்தின் மருத்துவ முகாமை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்.
பின்னர் பேட்டியளித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், தமிழகத்தில் ஆண்டுக்கு 1,250 மருத்துவ முகாம்கள் நடத்திட திட்டமிட்டு, சேலம் மாவட்டம் வாழப்பாடியில் கடந்த மாதம் 29-ந் தேதி கலைஞரின் வருமுன் காப்போம் திட்டத்தை முதல்மைச்சர் தொடங்கி வைத்தார். இந்த திட்டம் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் 50 இடங்களில் மருத்துவ முகாம்கள் நடந்துள்ளது. இந்த முகாம்களில் பல்வேறு மருத்துவ சிகிச்சைகள் வழங்கப்படுகின்றன.
இந்த முகாம்களில் கொரோனா தடுப்பூசியும் போடப்படுகிறது. டெங்கு காய்ச்சல் தற்போது கட்டுப்படுத்தப்பட்டு உள்ளது. தமிழகம் முழுவதும் இந்த ஆண்டு மட்டும் 3 ஆயிரத்து 90 பேருக்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் தற்போது 362 பேர் டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தமிழகத்தில் கொரோனாவால் இறந்த டாக்டர்களுக்கு இழப்பீடு வழங்குவதற்கு அறிவிப்பு வெளியிட்டதோடு நில்லாமல் தற்போது 4 டாக்டர்களுக்கு இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது.
மருத்துவ களப்பணியாளர்களான டாக்டர்கள், நர்சுகளுக்கு ஊக்கத்தொகைகள் வழங்கவும் முதல்வர் அறிவித்துள்ளார். மருத்துவ களப்பணியாளர்களுக்கு ஊக்கத்தொகைகள் வழங்குவதை முதலமைச்சர் தொடங்கி வைப்பார் என கூறினார்.
மேலும், இந்த நிகழ்ச்சியில் தென்சென்னை தி.மு.க. எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியன், சோழிங்கநல்லூர் தி.மு.க. எம்.எல்.ஏ. எஸ்.அரவிந்த்ரமேஷ் ஆகியோர் உடன் இருந்தனர்.