புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளம் ஒன்றியம் வெண்ணாவல்குடியில் தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் கோடைக்காலத் தண்ணீர்ப் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது.

தண்ணீர்ப் பந்தல் திறப்பு விழாக்களைப் பொறுத்தமற்றிலும் கோவில் திருவிழாக்களில் மட்டுமே இருந்த நிலையை மாற்றி கடந்த சில ஆண்டுகளாக அரசியல் கட்சிகளின் சார்பில் கோடை காலத்தில் மக்களின் தாகத்தை போக்கும் வகையில் மக்களிடம் நல்ல பெயர் வாங்க வேண்டும் என்ற எண்ணத்திலும் ஆங்காங்கே தண்ணீர்ப் பந்தல்கள் திறப்பது வாடிக்கையாகிவிட்டது.
கடந்த காலத்தில் திமுக அதிமுக சார்பில் மட்டுமல்லாது மதிமுக தேமுதிக போன்ற கட்சிகளின் சார்பிலும் ஆண்டுதோறும் கோடைக் காலத்தில் நகர்ப்புறங்களில் தண்ணீர்ப் பந்தல்கள் திறந்து கட்சித் தொண்டர்கள் மற்றும் முக்கியப் பிரமுகர்களின் உதவியுடன் இரண்டு அல்லது மூன்று மாத காலங்களுக்கு தண்ணீர், மோர், பானாக்கம் மற்றும் தர்ப்பூசணி பழங்களையும் வழங்குவதை வாடிக்கையாக வைத்திருக்கிறார்கள்.
இந்த நிலையில் தான் தேர்தல் மற்றும் தேர்தல் முடிவுகள் வந்த பிறகு தமிழ்நாட்டின் அரசியல் சூழ்நிலை காரணமாக வழக்கமாக கோடைக் காலத்தில் தண்ணீர் பந்தல்களைத் திறக்கும் திமுக, அதிமுக, மதிமுக, தேமுதிக போன்ற கட்சிகள் எல்லாம் தேர்தல் முடிவுகளில் அசந்திருந்த நேரத்தில் புதுக்கோட்டை மாநகரத்துக்குள் அமைச்சர் மாண்புமிகு முகமதுபர்வேஸ் அவர்கள் சில இடங்களில் தண்ணீர்ப் பந்தல்களைத் திறந்த பிறகு புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் பொறுப்பாளர்கள் நகர்ப்புறங்கள் பேரூராட்சி என்று மட்டும் இல்லாமல் கிராமங்களிலும் தண்ணீர்ப் பந்தல்களைத் திறக்கத் தொடங்கியுள்ளனர்.

அந்த வகையில் புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளம் ஒன்றியத்திற்கு உட்பட்ட வெண்ணாவல் குடி என்ற கிராமத்தில் இன்று அந்த பகுதியில் பொறுப்பாளர் கரு.மாணிக்கம் என்பவர் ஏற்பாட்டின் படி கோடைக்காலத் தண்ணீர்ப் பந்தல் திறக்கப்பட்டது. இந்நிகழ்விற்கு சிறப்பு அழைப்பாளராக தமிழக வெற்றிக்கழகத்தின் திருவரங்குளம் தெற்கு ஒன்றியச் செயலாளர் கே .ஆர். சுரேஷ் கலந்து கொண்டு தொடங்கி வைத்தார்.
அவருடன் வடக்கு ஒன்றியச் செயலாளர் மணி பிரதீபன், மேற்கு ஒன்றியச் செயலாளர் ஆதி.அரங்குளவன், ஆலங்குடி நகரச் செயலாளர் சிவா உள்ளிட்ட தமிழக வெற்றிக் கழகத்தின் பல்வேறு பொறுப்புகளில் உள்ளவர்களும் கலந்து கொண்டு இந்த கோடைக்காலத் தண்ணீர்ப் பந்தல் திறந்து வைத்து அங்கு வந்த மக்களுக்கு குடிதண்ணீர், மோர், பானாக்கம் ஆகியவற்றையும் வழங்கினர்.




