டெல்லியில் வீடு விரிவாக்க பணியின் போது கட்டிடம் இடிந்து விழுந்து 7 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
வடகிழக்கு டெல்லியின் ஜோஹ்ரிபூர் விரிவாக்கத்தில் உள்ள வீடு ஒன்று திடீரென இடிந்து விழுந்தது. இதில், வீட்டிற்குள் இருந்த பெண் உள்பட 7 பேர் படுகாயமடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் மற்றும் டெல்லி தீயணைப்பு துறையினர் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். இதில், படுகாயங்களுடன் 7 பேர் மீட்கப்பட்ட நிலையில், மேலும் இரண்டு பேர் இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளதாகவும், அவர்களை மீட்கும் பணியை தீவிரப்படுத்தி உள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். படுகாயமடைந்தவர்கள் அங்குள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தொழிலாளர்கள் வீட்டைப் புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது திடீரென முதல் மாடியின் கூரை இடிந்து விழுந்ததாக போலீசார் தெரிவித்தனர்.