ஏற்காட்டில் கடந்த இரண்டு நாட்களாக பெய்த பலத்த மழையின் காரணமாக இரண்டாவது கொண்டை ஊசி வளைவு அருகே மண்சரிவு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து சீரமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வந்த நிலையில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் சீரமைக்கும் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது.
4 ஜேசிபி இயந்திரங்கள் 10 லாரிகள் 130 பணியாட்கள் கொண்டு சீரமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. நாள் ஒன்றுக்கு 7000 மண் மூட்டைகள் அடுக்கப்பட்டு வருகிறது. இன்று கண்காணிப்பாளர் சுரேஷ் குமார், கோட்ட பொறியாளர் துறை, உதவி கோட்ட பொறியாளர் பிரபாகரன், உதவி பொறியாளர் ராஜேஷ்குமார், சாலை ஆய்வாளர் ரமேஷ் ஆகியோர் இடிபாடுகளை பார்வையிட்டு ஊழியர்களுக்கு அறிவுரை கூறினார்.
இதுதொடர்பாக கண்காணிப்பாளர் சுரேஷ் குமார் கூறுகையில், ஏற்காட்டில் தொடர்ந்து மழை பொழிவு இருப்பதால் சீரமைக்கும் பணியில் தொய்வு ஏற்பட்டு உள்ளதாகவும், மேலும் இரண்டு நாட்களுக்குள் சீரமைக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் அறிவித்திருந்த நிலையில் மாலை மற்றும் இரவு நேரங்களில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக சீரமைக்கும் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் இரண்டு நாட்களுக்குள் முடிப்பதற்கு போராடி வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.