• Wed. Apr 23rd, 2025

விசிக தலைவர் திருமாவளவனுக்கு பகிரங்க கொலை மிரட்டல்!

ByP.Kavitha Kumar

Feb 1, 2025

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனுக்கு சமூக வலைதளம் மூலம் கொலை மிரட்டல் விடுத்த உசிலம்பட்டியைச் சேர்ந்தவர் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த கண்ணன் என்பவர், மதுரை மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் அரவிந்திடம் புகார் மனு அளித்திருந்தார். அந்த மனுவில், ‘‘மதுரை மாவட்டம் உசிலம்பட்டியைச் சேர்ந்த சவுத்ரி, தனது சமூக வலைதளப் பக்கத்தில் விடுதலைச்சிறுத்தைகள் கட்சி குறித்து அவதூறு செய்தியும், அந்த கட்சியின் தலைவரும், எம்.பியுமான திருமாவளவனுக்கு கொலை மிரட்டலும் விடுத்து பதிவிட்டுள்ளார். சாதி மோதலை ஏற்படுத்தும் வகையில் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள சவுத்ரி மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று கூறியிருந்தார்.

இந்த புகாரின் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் அரவிந்த் பரிந்துரைத்தார். இதையடுத்து உசிலம்பட்டியைச் சேர்ந்த சவுத்ரி மீது சமூக பதற்றத்தை ஏற்படுத்தும் வகையில் செயல்படுதல், பொது அமைதியை சீர்குலைக்கும் வகையில் செயல்படுதல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் , மதுரை மாவட்ட சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.