கேரளாவில் சொத்தை அபகரிக்க ஆசைப்பட்டு, தாயை உணவில் விஷம் வைத்து கொன்ற மகளை போலீசார் கைது செய்தனர்.
கேரள மாநிலம் திருச்சூர் அருகே உள்ள குன்னம்குளம் பகுதியை சேர்ந்தவர் சந்திரன். இவருடைய மனைவி ருக்மினி (வயது 58). இவர்களுக்கு இந்துலேகா (36) உள்பட 2 மகள்கள் உள்ளனர். இந்துலேகாவின் கணவர் துபாயில் வேலை பார்த்து வருகிறார். கணவனுக்கு தெரியாமல் இந்துலேகா நகைகளை வங்கியில் அடகு வைத்து ஜாலியாக செலவு செய்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் தாயிடம் சென்று சொத்தை தன்னுடைய பெயருக்கு எழுதித்தருமாறு கேட்டுள்ளார். அதற்கு தாயார் மறுத்துவிட்டார். இதனால் ஏமாற்றம் அடைந்த இந்துலேகா அவரை கொல்லவும் துணிந்தார். அதன்படி கடந்த 2 நாட்களுக்கு முன்பு ருக்மினிக்கு இந்துலேகா உணவில் விஷம் கலந்து கொடுத்தார். அதை சாப்பிட்ட சிறிது நேரத்தில் ருக்மினி மயங்கி விழுந்துள்ளார். பின்னர் ருக்மினியை திருச்சூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு சென்று இந்துலேகா சேர்த்தார். இதற்கிடையே சுயநினைவின்றி இருந்த ருக்மினியும் இறந்தார். பின்னர் போலீசார் இந்த சம்பவம் தொடர்பாக இந்துலேகாவிடம் விசாரித்தனர். அப்போது அவருடைய நடவடிக்கையில் போலீசாருக்கு சந்தேகம் எழுந்ததால் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். இதில் இந்துலேகா தான் தாய் ருக்மினிக்கு உணவில் விஷம் கலந்து கொடுத்து கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.