பொள்ளாச்சி பகுதிகளில் காகங்கள் அதிகமாக வேட்டையாடப்படுவதால், பிரியாணி பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
கோவை மாவட்டம், பொள்ளாச்சியை அடுத்த பெரிய கவுண்டனுர் பகுதியில் கடந்த சில நாட்களாக காகங்கள் மர்மமான முறையில் இறந்து கிடப்பதைக் கண்டு, அப்பகுதி விவசாயிகள் குழப்பம் அடைந்திருக்கின்றனர். இந்த நிலையில் விவசாயி நாகராஜ் தோட்டத்தின் அருகே சந்தேகத்திற்கு இடமான நபர் ஒருவர் இறந்து கிடந்த காகங்களை சாக்கு பைகளில் போட்டு எடுத்துச் சென்றதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த நாகராஜ், அவரை விசாரிக்க முற்பட்டபோது அந்த நபர் தப்பி ஓடி இருக்கிறார். உடனே அவரைத் துரத்திச் சென்று மடக்கிப் பிடித்து, அவரைப் போலீசாரிடம் ஒப்படைத்துள்ளனர். போலீசார் நடத்திய விசாரணையில் பெரியாக்கவுண்டர் பகுதியில் சுற்றித் தெரிந்த அந்த நபர், மூக்கு பொடியுடன் ஏதோ ஒரு விஷ மருந்து கலந்து அங்கங்கே தூவி இருக்கிறார். அதை சாப்பிட்ட காகங்கள் மயங்கி விழுந்திருக்கின்றன . தோட்டங்களிலும் சாலைகளிலும் மயங்கி விழுந்த 50 க்கு மேற்பட்ட காகங்கள் இறந்து கிடந்திருக்கின்றன. அந்த காகங்களை சாக்கு பைகளில் சேகரித்து தப்பியோட முயன்றிருக்கிறார்.
அந்த மருந்தை சாப்பிட்டு கால்நடைகளுக்கும் பாதிப்பு ஏற்படக்கூடிய அபாயம் இருக்கிறது. இதனால் அப்பகுதி விவசாயிகள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர். இத்தனை காகங்களையும் கொன்று எங்கே எடுத்துச் செல்கிறாய் என்று கேட்ட போது அந்த நபர் தான் நீண்ட காலம் குஜராத்தில் இருந்ததாகவும் செஞ்சி வாடி பகுதியைச் சேர்ந்தவர், சர்க்கஸில் வேலை பார்ப்பவர் என்றும் பெயர் சூர்யா என்றும் வயது 37 என்றும் தெரிவித்திருக்கிறார். வெண்ணிற படை நோயை குணப்படுத்தும் மருந்து தயாரிப்பதற்காக தான் காகங்களை கொன்றதாக கூறியிருக்கிறார். ஆனாலும் போலீசுக்கு பிரியாணிக்காக காகங்களை எடுத்துச் செல்கிறார் என்று சந்தேகம் எழுந்திருக்கிறது.
மருந்து தயாரிப்பதற்காக அந்த காகங்களை வேட்டையாடவில்லை. ஏதோ ஹோட்டலில் கொடுத்து பணம் பார்ப்பதற்காகத்தான் இந்த வேலையை செய்து இருக்கிறார் என்று பேச்சு எழுந்திருக்கிறது. இந்தச் சம்பவம் பிரியாணி பிரியர்களை அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறது.