கடந்த சில நாட்களாக பா.ஜ.க.வின் தலைவர்கள் உள்பட பல நிர்வாகிகளும் அதிமுகவில் இணைந்து வருவதைக் கண்டு ஆவேசமான அண்ணாமலை அதிமுக.வைத் தாக்கிப் பேசி பரபரப்பைக் கிளப்பினார்.
“பாஜகவில் இருந்து ஆட்களை சேர்த்துதான் அதிமுக வளரவேண்டும் போல… பாஜக நிர்வாகிகளை அதிமுக வேட்டையாட தொடங்கியுள்ளது… அதுபோல நான் அதிமுகவில் இருப்பவர்களை வாங்க வேண்டி இருந்தால் என்னோட லிஸ்ட் பெருசாக இருக்கும்… அதற்கான நேரத்தையும் இடத்தையும் விரைவில் முடிவு செய்வேன்” என அண்ணாமலை கூறியிருந்தார். இதற்கு, அண்ணாமலையின் அரசியல் முதிர்ச்சியின்மையை காட்டுவதாக அதிமுகவினர் விமர்சித்தனர். இந்நிலையில், அதிமுக – பா.ஜ.க கூட்டணி தொடருமா? தொடருமா? என்பது கேள்விக்குறியாக இருந்தது.
இந்த நிலையில், கடந்த 10ஆம் தேதி, கிருஷ்ணகிரிக்கு வருகை தந்த பா.ஜ.க. தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா, பாஜக நிர்வாகிகளை தனியாக சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளார். அப்போது, அவர் அதிமுகவுடன் சுமூகமாக செல்ல வேண்டும். அதிமுக தொண்டர்களுடன், தலைவர்களுடன் வம்பு வளர்க்க வேண்டாம். அதிமுக தலைமை குறித்து எந்த குறையையும் சொல்லக்கூடாது. இதை தமிழக பாஜக தலைவரும், நிர்வாகிகளும், தொண்டர்களும் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என்று ஜெ.பி. அறிவுறுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில், அதிமுகவுடன் சுமூகமாக செல்ல வேண்டும் என்று தமிழக பாஜக தலைவர்களுக்கும், நிர்வாகிகளுக்கும் ஜெ.பி. நட்டா கண்டிப்புடன் கூறியுள்ளதால் பாராளுமன்ற தேர்தலில் அதிமுக – பாஜக கூட்டணி அமைப்பது உறுதி என்று தெளிவாகியுள்ளது.