தமிழகத்தில் அடுத்தடுத்து ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை என பண்டிகைகள் வருவதால் இன்றைய தினம் பூக்கள் விற்பனை களைகட்டியுள்ளது.
சேலம் பழைய பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ள வா.உ.சி பூ மார்க்கெட்டில் பூக்களை வாங்க ஏராளமானோர் குவிந்தனர். அரசின் தீவிர நடவடிக்கையால் சற்று குறைந்து வரும் நோய் தொற்று பாதிப்பு இப்பகுதியில் சமூக இடைவெளியை காற்றில் பறக்கவிட்ட பொதுமக்களால் மீண்டும் நோய்த் தொற்று பரவும் சூழ்நிலையை ஏற்படுத்தியுள்ளது.
தொடர் பண்டிகை காரணமாக பூக்களின் விலையும் பல மடங்கு விலை உயர்ந்துள்ளது. குறிப்பாக இரண்டு நாட்களுக்கு முன்பு ரூ.400க்கு விற்கப்பட்ட குண்டுமல்லி இன்று ரூ.800 க்கும், ரூ.60க்கு விற்க்கப்பட்ட சாமந்தி 200 ரூபாய்க்கும் விற்க்கப்படுகிறது. இதேபோல் மற்ற பூக்களின் விலையும் உயர்ந்துள்ளது.முல்லை ரூ.700 க்கும்,ஜாதி மல்லி ரூ. 240 க்கும், காக்கட்டான் ரூ. 450 க்கும், அரளி ரூ.320க்கும், நந்தியாவட்டம் ரூ.320க்கும், விற்பனை செய்யப்படுகிறது. விலை உயர்வையும் பொருட்படுத்தாமல் பொதுமக்கள் பூக்களை வாங்கி சென்றனர்.
மேலும் மாநகராட்சி அதிகாரிகள் ஒலிபெருக்கி மூலம் நோய் தடுப்பு அறிவிப்புகளை அறிவித்த போதிலும் பொதுமக்கள் காதில் வாங்காமல் கூட்டம் கூட்டமாக குவிந்து பூக்களை வாங்கி சென்றனர். இதனால் நோய் தொற்று பரவும் அபாயம் அச்சம் ஏற்பட்டுள்ளது.