• Fri. Apr 26th, 2024

ஐந்தாம் வகுப்பு மாணவனின் அசத்தல் கண்டுபிடிப்புகள்..,குவியும் பாராட்டுகள்..!

Byவிஷா

Feb 11, 2023

மூன்று புதிய அறிவியல் கண்டுபிடிப்புகளை செயல் விளக்கம் செய்து காட்டி அசத்திய ஐந்தாம் வகுப்பு படிக்கும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.
கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பள்ளப்பட்டி பகுதியில் செயல்படும் அரசு உதவி பெறும் பள்ளியான மருதா பள்ளியில் ஐந்தாம் வகுப்பு பயின்று வரும் மாணவன் முகமது ருபியான். அறிவியல் பாடத்தை விரும்பி படித்து வரும் மாணவன் அவ்வப்போது அறிவியல் கண்டுபிடிப்புகள் தொடர்பான ஆய்வில் ஈடுபட்டு வருகிறார். மேலும், பள்ளியில் நடைபெறும் பல்வேறு அறிவியல் போட்டி தேர்வுகளிலும் வெற்றி பெற்று பல்வேறு அமைப்புகளிடம், பயின்று வரும் பள்ளியிலும் பதக்கம், சான்றிதழ், கோப்பைகளும் பெற்றுள்ளார்.
நாம் வாழும் அவசர உலகத்தில் அதிகமாக சேர்ந்து வரும் குப்பைகளை பயன்படுத்தி மின்சாரம் தயாரிக்கும் முறையையும், தீப்பற்றினால் தானாகவே தண்ணீர் ஊற்றி அணைக்கும் கருவியையும், இரவு நேர பயணத்தில் வாகனங்கள் உமிழும் ஒளியால் ஏற்படும் விபத்தை தடுக்க தானியங்கி கருவியையும் சமீபத்தில் கண்டுபிடித்துள்ளார். இது தொடர்பான செயல் விளக்கத்தை செய்தியாளர்கள் முன்பு இன்று அவரது வீட்டில் செய்து காட்டியுள்ளார்.
மேலும் இது தொடர்பாக மாணவன் முகமது ருபியான்..,
“அதிகப்படியாக சேகரமாகும் குப்பைகளை எரித்து அதன் மூலம் கிடைக்கும் வெப்பத்தை சோலார் தகடுகள் மூலம் பேட்டரியில் சேமித்து அதை மின்சாரமாக மாற்றி பயன்படுத்தலாம் எனவும், எளிதில் தீப்பிடிக்கும் பொருட்களை தயாரிக்கும் நிறுவனத்தில் தனது கண்டுபிடிப்பை பொருத்திவிட்டால் அதில் உள்ள சென்சார் உடனடியாக அலாரமாக எச்சரித்து, பின்னர் மோட்டாரை இயக்கி தண்ணீரை தீப்பற்றிய இடத்தில் பொழிந்து தானாகவே தீயை அணைத்து கட்டுப்படுத்தும் என்றார்”.
கண்டுபிடிப்பாக இரவு நேரங்களில் சாலை விபத்துகளை தடுப்பதற்காக தான் கண்டுபிடித்து உள்ள கருவியை ஒவ்வொரு வாகனத்திலும் பொருத்திவிட்டால், எதிரெதிரே வரும் வாகனங்கள் முன் விளக்கை அதிகப்படியான வெளிச்சத்தை உமிழ்ந்தாலும் தனது கண்டுபிடிப்பான கருவி தானாகவே அந்த விளக்கின் அதிகப்படியான ஒளியை அணைத்து ஓட்டுநர்களின் கண்களை கூசாமல் செய்வதால் விபத்துக்கள் தடுக்கப்படுகிறது என்றார்”.
மாணவனுடைய செயல் விளக்கத்தை கண்ட அப்பகுதி பொதுமக்கள் பொன்னாடை அணிவித்து பாராட்டு தெரிவித்தனர். மேலும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவன் அறிவியல் கண்டுபிடிப்பில் ஆர்வமாக இருந்து வரும் நிலையிலும் ஏழ்மை குடும்பத்தில் பிறந்து, அறிவியல் கண்டுபிடிப்பில் சாதிக்க துடிக்கும் பள்ளி மாணவனுக்கு நிதி உதவி இல்லாததால், தமிழக அரசு தாமாக முன்வந்து உதவ வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *