நடிகர் விமல் தயாரித்த ” மன்னர் வகையறா ” படத்திற்கு தயாரிப்பாளர் கோபி என்பவர் ரூபாய் ஐந்து கோடி பைனான்ஸ் உதவி செய்திருந்தார். இந்த பணத்திற்கு ஈடாக நடிகர் விமல் கொடுத்திருந்த காசோலை விமலின் வங்கிக்கணக்கில் பணம் இல்லாததால் திரும்பி வந்தது.
இதனால் நடிகர் விமல் மீது ஜார்ஜ் டவுன் விரைவு நீதிமன்றத்தில் காசோலை மோசடி வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் நீண்ட காலமாக ஆஜராகாமல் இருந்து வந்த விமல் நீதிமன்றத்தின் கெடுபுடியால் ஆஜராக வேண்டிய சூழ்நிலை உருவானது. அதன் பிறகு மனுதாரரை குறுக்கு விசாரணை செய்யும் படி நீதிமன்றம் அனுமதி அளித்தும் கூட மனுதாரர் கோபியை விமல் தரப்பு குறுக்கு விசாரணை செய்யவில்லை. எனவே மேற்படி வழக்கு இறுதிக்கட்டத்தை எட்டி வரும் நிலையில் மறுபடி விமல் தரப்பில் மனுதாரரை குறுக்கு விசாரணை செய்ய மனு தரப்பட்டது. இதனை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் மனுதாரர் கோபியை குறுக்கு விசாரணை செய்ய நேரம் ஒதுக்கி அனுமதி அளித்தது. ஆனால் அன்றைய தினமும் கோபியை குறுக்கு விசாரணை செய்ய விமல் தரப்பு நீதிமன்றத்திற்கு வரவில்லை.
இதனால் எரிச்சலடைந்த நீதிபதி நடிகர் விமலுக்கு முந்நூறு ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டதோடு வழக்கையும் 25 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.