



பெற்ற மகன்கள் கொடுமைப்படுத்துவதாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு பெட்ரோல் கேனுடன் வந்த தம்பதியினரால் பரபரப்பு ஏற்பட்டது.
சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் அருகே உள்ள உடவயல் கிராமத்தைச் சேர்ந்த முத்துச்சாமி, இந்திராணி தம்பதியினர் தங்களது மகன்களின் கொடுமையால் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பெட்ரோல் கேனுடன் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

முத்துச்சாமி-இந்திராணி தம்பதியினருக்கு பாலமுருகன், கண்ணதாசன், செந்தில் முருகன், கீதா என நான்கு குழந்தைகள் உள்ளனர். இவர்களில், கண்ணதாசனின் அரவணைப்பில் கடந்த 20 வருடங்களாக இருந்து வருகின்றனர். தம்பதியினருக்கு சொந்தமான 6 ஏக்கர் விவசாய நிலங்களை பிரித்து தர வேண்டும் என இரு மகன்களும் அடித்து துன்புறுத்தி வருவதாக கூறி, மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித்தை சந்தித்து மனு அளிக்க தம்பதியினர் பெட்ரோல் கேனுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு வந்தனர்.

இந்நிலையில், பாதுகாப்புப் பணியில் இருந்த காவலர்கள் பெட்ரோல் கேனை பறிமுதல் செய்தனர். பின்னர், அவர்களை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் அழைத்து சென்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

