• Wed. Sep 2nd, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

விசாரணை ஆணைத்திற்க்கு கோடிகளில் ஆகும் செலவுகள்…

Byமதி

Oct 20, 2021

“விசாரணை ஆணையம்” – பெரும்பாலானவர்களுக்கு இது பழகிப் போன பெயர் தான். கலவரம், போராட்டம், உயிரிழப்பு, ஊழல் என எது நடந்தாலும் அல்லது பிரச்னைக்குரிய நேரங்களில் அரசால் அமைக்கப்படுவதுதான் விசாரணை ஆணையம். ஆணையம் என்ன காரணத்திற்காக அமைக்கப்பட்டதோ அது குறித்து விசாரணை மற்றும் ஆய்வு செய்து அதற்கான காரணங்களையும் சில பரிந்துரைகளையும் முன் வைக்கும். ஓய்வு பெற்ற நீதிபதி , அதிகாரிகளை கொண்டு எத்தனையோ விசாரணை ஆணையங்கள் இதுவரையில் அமைக்கப்பட்டுள்ளன. ஜெயலலிதாவின் மறைவுக்கு பின் தமிழகத்தில் 4 விசாரணை ஆணையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

அந்தவகையில் தமிழக மக்கள் அனைவருக்கும் தெரிந்த விசாரணை கமிஷன் என்றால் அது, மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் குறித்த விசாரணை. இந்த விசாரணைக்கு இதுவரை 3 கோடியே 52 லட்சம் ரூபாய் செலவு செய்யப்பட்டுள்ளதாம்.

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ், நெல்லையைச் சேர்ந்த வழக்கறிஞர் பிரம்மா என்பவர் இந்த தகவல்களை பெற்றுள்ளார். அதில் கடந்த 2001-ஆம் ஆண்டு முதல் தற்போது வரை 24 விசாரணை ஆணையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், அவற்றில் இரண்டு விசாரணை ஆணையங்களின் விசாரணை மட்டும் நிலுவையில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக அமைக்கப்பட்ட ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம் இதுவரை 154 பேரிடம் விசாரணை நடத்தியுள்ளதாகவும், விசாரணைக்காக இதுவரை 3 கோடியே 52 லட்சத்து 78 ஆயிரத்து 534 ரூபாய் செலவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல், 2018 ஆம் ஆண்டு முதல் தூத்துக்குடி துப்பாக்கி சூடு குறித்த விசாரணையை நடத்தி வருவதாகவும், நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையத்திற்கென 4 கோடியே 23 லட்சத்து 65 ஆயிரத்து 557 ரூபாய் செலவு செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தகவல் பெறப்பட்டுள்ளது.