லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணைக்கு வர மறுப்பு..!
முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயாபாஸ்கர்
அ.தி.மு.க முன்னாள் போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு இன்று (செப்.30) ஆஜராகும்படி லஞ்சஒழிப்புத்துறை சம்மன் அனுப்பிய நிலையில், ஊரக உள்ளாட்சித் தேர்தல் பணியால் விசாரணைக்கு வர இயலாது என பதில் அளித்துள்ளார்.
அதிமுக மாவட்டச் செயலாளரும் முன்னாள் போக்குவரத்துத் துறை அமைச்சருமான எம் ஆர் விஜயபாஸ்கர் மீது லஞ்சப் புகார்கள் எழுந்ததையொட்டி, அவருடைய வீடு, தொழில் நிறுவனங்கள் உள்ளிட்ட இடங்களில் கடந்த ஜூலை 21 ஆம் தேதி லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் சோதனை நடத்தினார்கள். அத்துடன் அவரது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீடுகளிலும் சோதனை நடந்தன.
இந்த சோதனையின் போது ஏராளமான ஆவணங்கள் கிடைத்ததாகக் கூறப்படுகிறது. இதையொட்டி அவர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. மேலும் வருமானத்துக்கு மீறி அதிகமான சொத்துக்களை வாங்கியதாகக் குற்றம் சாட்டப்பட்ட அமைச்சர் எம்.ஆர்.விஜய பாஸ்கர் இன்று விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என லஞ்ச ஒழிப்புத் துறையினர் நோட்டிஸ் அனுப்பினர்.
முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் இந்த விசாரணைக்கு வர மறுத்துள்ளார்.
தமக்குத் தமிழக ஊரக உள்ளாட்சித் தேர்தல் குறித்த பணி இருப்பதால் தம்மால் விசாரணைக்கு வர இயலாது என அவர் தெரிவித்துள்ளார். எனவே அவருக்குப் பதிலாக அவரது தணிக்கையாளர் அல்லது வழக்கறிஞர் ஆஜராகலாம் எனக் கூறப்படுகிறது.