வெம்பக்கோட்டை ஒன்றியம் ஜெகவீரம்பட்டி விஜய கரிசல்குளம், எட்டக்காபட்டி ,உள்ளிட்ட கிராமங்களில் ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடம் சேதம் அடைந்ததால் அப்புறப்படுத்தி விட்டு புதிய அலுவலக கட்டிடம் கட்ட வேண்டும் என தொடர்ந்து விடுத்த கோரிக்கையின் பேரில் ஊராட்சி மன்ற அலுவலகத்திற்கு புதிய கட்டிடம் கட்டப்பட்டு நான்கு மாதங்களுக்கு மேலாகிவிட்டது.

ஆனால் திறப்பு விழா நடைபெறாமல் கட்டிடம் பூட்டப்பட்டு கிடக்கிறது. இதனால் அலுவலக பணிகள் செய்வதில் சிரமப்பட்டு வருகின்றனர். மேலும் கட்டிடம் பயன்பாட்டுக்கு வராமல் மூடியே இருப்பதால் சேதம் அடையவும் வாய்ப்புள்ளது.

ஆகையால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மூடப்பட்டு கிடக்கும் ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடங்களை உடனடியாக திறந்து பயன்பாட்டுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.




