மறைந்த தி.மு.க தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான கருணாநிதியின் குடும்பத்தைச் சேர்ந்த அனைவருமே கிட்டதட்ட நேரடி அரசியலிலும் மறைமுக அரசியலிலும் ஈடுபட்டு வருவது என்பது அனைவரும் நன்கு அறிந்த நிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் மருமகள் உதயநிதி ஸ்டாலின் எனக்கு அரசியல் அவ்வளவாக தெரியாது என்று கூறியிருப்பது அனைவரையும் வியப்புக்குள்ளாக்கி இருக்கின்றது.
உதயநிதி ஸ்டாலின் பவுண்டேஷன் சார்பில் நிகழ்ச்சி ஒன்று சமீபத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட கிருத்திகா உதயநிதி பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: உதயநிதி ஸ்டாலின் பவுண்டேஷன் நிகழ்ச்சி ஒன்று இன்றைய தினம் நடத்தப்பட்டது. திருநங்கைகளுக்கு வாழ்வாதாரத்திற்கு பயிற்சி அளிக்கும் வகையில் இந்த நிகழ்ச்சி அமைந்துள்ளது.
இந்த நிகழ்ச்சிக்கு தேவையான தையல் மிஷின்கள், ஸ்டவ் ஆகியவற்றை நாங்கள் அளித்துள்ளோம். உதயநிதியின் அம்மா துர்காஸ்டாலினை வைத்து இந்த நிகழ்ச்சியை நடத்தி உள்ளோம் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் முதலில் நாங்கள் இந்த நிகழ்ச்சியை செய்தது உதயநிதியின் முயற்சியால்தான் தொடங்கி, அதன் பின்னர் திருநங்கைகளுக்கு என்னென்ன தேவை என்பதை நாங்கள் கண்டுபிடித்தோம் என்றும், அவர்களுக்கு தேவையானது நிறைய இருக்கின்றது, அதை எப்படி செயல்படுத்துவது, அவர்களிடம் எப்படி உதவியை சேர்ப்பது என்பது குறித்து நாங்கள் ஆய்வு செய்து வருகிறோம் என்றும் தெரிவித்தார்.
மேலும் இப்போதுதான் ஒரு ஆரம்ப புள்ளி வைத்து இருக்கின்றோம் என்றும், இதனையடுத்து படிப்படியாக தமிழகம் முழுவதும் திருநங்கைகளுக்குத் தேவையான உதவிகளை செய்யவும், அவர்களின் தேவைகளை பூர்த்தி செய்யவும் வேண்டும் என்பதே எங்களுடைய நோக்கம் என்று கூறினார்.
உதயநிதியும் அதையே தான் விரும்புகிறார் என்றும், ஒவ்வொரு செயலாக செய்வதில் இது ஒரு ஆரம்ப முயற்சி என்றும் விரைவில் தமிழகம் முழுவதும் இதனைக் கொண்டு போய் சேர்ப்போம் என்றும் கூறினார். இந்த நிலையில் அரசியலில் 50சதவிதம் பெண்களுக்கு இட ஒதுக்கீடு வேண்டும் என்று திமுகவின் கொள்கையாக உள்ளது. அந்த வகையில் நீங்கள் அரசியலுக்கு வருவீர்களா என்று கேட்ட கேள்விக்கு பதில் அளித்த அவர் ‘எனக்கு அவ்வளவாக அரசியல் தெரியாது| என்று சிரித்தபடியே பதிலளித்திருப்பதுதான் தற்போது வைரலாகி வருகிறது.