புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி தாலுகா திருக்கட்டளை கிராமத்தில் உள்ள மேட்டுப்பட்டி பகுதியில் அருள்மிகு பூரண புஷ்கலாம்பிகா சமேத காடப்பிள்ளை அய்யனார் கோவிலுக்கு புதிய கல்கோவில் கடந்த பல ஆண்டுகளாகக் கட்டி வந்தனர்.

கல்லால் உருவாக்கப்படும் ஆலயங்கள் நூற்றுக்கணக்கான ஆண்டுகள் மட்டும் அல்ல ஆயிரக்கணக்கான ஆண்டுகளும் நிலைத்து நிற்கின்றன. அந்த வகையில் இந்த கிராமத்தைச் சேர்ந்த அருள்மிகு காடப்பிள்ளை அய்யனார் கோவில் பங்காளிகளால் ஏற்படுத்தப்பட்ட இக்கோவிலில் இன்று குடமுழுக்கு விழா நடத்தப்பட்டது.

காடப் பிள்ளை அய்யனார் கோவிலுடன் பரிவார தெய்வங்களாக விநாயகர், சப்த கன்னிமார், அடைக்கலம் காத்த அய்யனார் சமேத அம்பாள், சின்னக்கருப்பர், பெரிய கருப்பர், முத்துக் கருப்பர், அரசு முகம், சன்னாசி, சோனக்கருப்பர், முன்னோடிக்கருப்பர், பட்டவன், பட்டைவச்சி, கருப்பாயி அம்மன், காத்தாயி அம்மன், பிச்சாயி அம்மன், வடுவச்சி அம்மன். செம்முனிஸ்வரர், காளியம்மன், கொழுக்கட்டை கருப்பர் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கும் ஒரே நேரத்தில் குடமுழுக்கு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

இதற்காக மூன்று நாட்களாக சிவாச்சாரியார்களை கொண்டு முறைப்படியான பூஜை முறைகள் அஷ்டாதச கிரியைகள், தீப பூஜைகளுடன் அக்னி குண்டங்கள் வளர்த்து மகா கணபதி பூஜை, நவகிரக பாராயணம் ஹோமம் என அழைத்து பூஜை முறைகளை முறையாகச் செய்து சிவாச்சாரிகள் குடமுழுக்கை நடத்தி வைத்தனர். தொடர்ந்து 48 நாட்களுக்கும் மண்டலா பூஜை வரை அனைத்து நிகழ்வுகளும் நடத்துவதற்கு காட பள்ளி அய்யனார் கோவில் பங்காளிகள் ஏற்பாடு செய்து வருகின்றனர்.




