• Sun. Feb 9th, 2025

ஊரடங்கு கட்டுப்பாடுகள் குறித்து முதலமைச்சர் இன்று ஆலோசனை!..

By

Aug 20, 2021

ஊரடங்கை நீட்டிப்பது மற்றும் தளர்வுகள் தொடர்பாக சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளார்.


கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு மாநிலங்கள் ஊரடங்கு உத்தரவை நீட்டித்து வருகின்றன. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தலுக்கு இடையே இந்த ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் தி.மு.க. வெற்றி பெற்று, கடந்த மே மாதம் மு.க.ஸ்டாலின் முதலமைச்சராக பதவியேற்றார்.

தமிழக அரசு சார்பில் மேற்கொள்ளப்பட்ட தீவிர கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மூலம் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. இதன் காரணமாக ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் தற்போது அமலில் இருக்கும் தளர்த்தப்பட்ட ஊரடங்கு வரும் 23-ம் தேதியுடன் முடிவடைகிறது. தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகள், திரையரங்குகள் உள்ளிட்ட இடங்களை திறப்பதற்கு இன்னும் அனுமதி வழங்கப்படவில்லை.

இந்நிலையில், ஊரடங்கை நீட்டிப்பது மற்றும் தளர்வுகள் தொடர்பாக சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று காலை 11 மணிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. இதில் தலைமைச் செயலாளர் மற்றும் உயர்மட்ட அதிகாரிகள் கலந்து கொள்கின்றனர். இந்தக் கூட்டத்தில் பள்ளிகள் திறப்பு குறித்தும் ஆலோசனை நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.