உதயநிதிசெய்யும் தவறை முதலமைச்சர் கண்டிக்க வேண்டும் , நியாயப்படுத்த கூடாது என வானதி சீனிவாசன்
கேட்டுக்கொண்டார்.
தமிழக சட்டப்பேரவையில் நேற்று முன்தினம் அதிமுக கொறடா எஸ்பி வேலுமணி பேசும்போது, சென்னையில் நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டிக்கு சட்டமன்ற உறுப்பினர்களுக்கு வழங்க வேண்டும் என வலியுறுத்தினார். இதனை தொடர்ந்து பேசிய அமைச்சர் உதயநிதி, முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியிடம் தங்கள் நண்பர் தான் அமித்ஷா அவருடைய மகன் தான் ஜெய்ஷா அவர் தான் கிரிக்கெட் போட்டியை நடத்துகிறார். நீங்களே நேரடியஆக அவரிடமே கேட்கலாமே என கூறியிருந்தார். இந்த சம்பவம் நேற்று முன்தினம் நடைபெற்ற நிலையில் இன்றைய சட்டப்பேரவை கூட்டத்தின் போது நேரமில்லா நேரத்தில் பேசிய பா.ஜ.க சட்டமன்ற கட்சி தலைவர் நயினார் நாகேந்திரன்,
நேற்று முன் தினம் ஐ.பி.எல் டிக்கெட் குறித்து அமைச்சர் உதயநிதி பேசும் போது மத்திய அமைச்சர் அமித்ஷா பெயர் இடம் பெற்றுள்ளது. அதை நீக்க வேண்டும் என கோரினார். அதற்கு பதிலளித்த முதலமைச்சர் ஸ்டாலின், அதை ஏன் நீக்க வேணும். அதில் என்ன தவறு உள்ளது. திரு அமித்ஷா என தான் பேசியுள்ளார். அது என்ன தகாத வார்த்தையா. தவறு இருந்தால் நானே நீக்க சொல்வேன் என கூறினார். இதனையடுத்து அமித்ஷா பெயரை நீக்க சபாநாயகர் அப்பாவு மறுப்பு தெரிவித்தார். இதனையடுத்து அமித்ஷா பெயர் அவைக்குறிப்பில் இருந்து நீக்காததை கண்டித்து பா.ஜ.க உறுப்பினர்கள் சட்டமன்றத்தில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
வெளிநடப்பு செய்தப்பின் செய்தியாளர்களை சந்தித்த நயினார் நாகேந்திரன், அமித்ஷா மற்றும் அவர் மகன் குறித்து கிண்டல் கேலியுடன் உதயநிதி பேசியுள்ளார். கிரிக்கெட் விளையாட்டிற்கான தமிழ்நாட்டு தலைவராக அமைச்சர் பொன்முடியின் மகன் இருக்கிறார். அவர் பெயரை உதயநிதி ஏன் கூறவில்லை என கேட்டார். அவரை தொடர்ந்து பேசிய வானதி சீனிவாசன், தனது மகன் என்பதால் அமைச்சர் உதயநிதி செய்யும் தவறுகள் முதலமைச்சர் கண்ணில் தெரியவில்லை. அதை நியாயப்படுத்துகிறார். உதயநிதி வளர வேண்டிய அமைச்சர் , எனவே அவர் செய்யும் தவறை முதலமைச்சர் கண்டிக்க வேண்டும் , நியாயப்படுத்த கூடாது என கேட்டுக்கொண்டார்.