மேற்குவங்க சட்டமன்றத்தை முடக்கிய அம்மாநில ஆளுநரின் செயலுக்கு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கும், ஆளுநர் ஜக்தீப் தங்கருக்கும் இடையே சமீப காலமாக மோதல் போக்கு நிலவி வருகிறது. அம்மாநில சட்டசபை கூட்டத்தொடரில் ஆளுநருக்கு எதிராக தீர்மானம் கொண்டு வருவது குறித்து முதல்வர் மம்தா பானர்ஜி அரசு பரிசீலித்து வந்த நிலையில், மேற்குவங்க சட்டப்பேரவையை ஆளுநர் ஜக்தீப் தங்கர் முடக்கியுள்ளார். மேற்குவங்க சட்டமன்றத்தை பிப்ரவரி 12, 2022 முதல் முடக்குகிறேன் என்று ஜக்தீப் தங்கர் உத்தரவிட்டுள்ளார்.
இந்த நிலையில் மேற்குவங்க சட்டப்பேரவையை நிறுத்தி வைத்த அம்மாநில ஆளுநரின் செயலுக்கு தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் எதிர்ப்பு தெரிவித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், மேற்குவங்க ஆளுநரின் செயல் விதிமுறைகள் மற்றும் மரபுகளுக்கு எதிரானது. ஒருவருக்கொருவர் பரஸ்பர மரியாதை கொடுப்பதில்தான் ஜனநாயகத்தின் அழகு இருக்கிறது. மாநிலத்தின் தலைமை பொறுப்பில் இருப்பவர் அரசியல் சட்ட விதிகளை காப்பவராக இருக்க வேண்டும் என கூறியுள்ளார்.