பொங்கல் பரிசு டோக்கன் வழங்கும் தேதி மீண்டும் மாற்றப்பட்டுள்ளது.கரும்பு சேர்க்கப்பட்டுள்ளதால் ஜன.3 முதல் டோக்கன் வழங்கும்பணி தொடங்கும் என தகவல் வெளியாகி உள்ளது.
தமிழக அரசு அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கு ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசாக ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ரூ. 1000 ரொக்க பணம் போன்றவைகள் வழங்கப்படும் என்று அறிவித்தது. இதில் கரும்பு சேர்க்கப்படாததால் விவசாயிகள் மற்றும் எதிர்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததோடு பொங்கல் பரிசு தொகுப்பில் கரும்பை சேர்க்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.
இந்நிலையில்,பொங்கல் பரிசுத் தொகுப்பில் கரும்பு வழங்குவது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமைச் செயலகத்தில் ஆலோசனை நடத்தினார்.அதன் பின் பொங்கல் பரிசுத் தொகுப்புடன் முழு கரும்பு வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். மேலும் பொங்கல் பரிசு தொகுப்புக்கான டோக்கன் வழங்கும் பணி ஜனவரி. 3ம் தேதி முதல் 8ம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை மறுநாள் டிசம்பர் 30 முதல் டோக்கன் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில் ஜனவரி 3 முதல் வழங்கப்படும் என முதலமைச்சர் அறிவித்துள்ளார். விவசாயிகளிடம் இருந்து கரும்பு கொள்முதல் செய்ய வேண்டி இருப்பதால் டோக்கன் வழங்கும் தேதி மாற்றப்பட்டுள்ளது