தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில், விருதுநகர், தென்காசி, மதுரை ஆகிய 3 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நேற்று நள்ளிரவு முதல் இன்று அதிகாலை வரையில், தமிழகத்தில் தென் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மீதமானது முதல் லேசான சாரல் மழை வரை பெய்தது. குறிப்பாக தூத்துக்குடி மாநகரத்தில் பல்வேறு இடங்களில் சாரல் மழை பெய்தது.
பிப்ரவரி மாதம் பருவம் தவறி பெய்து வரும் மழை காரணமாக தூத்துக்குடியில் உப்பள தொழில் மீண்டும் பாதிக்கப்பட்டுள்ளது. பிப்ரவரி மதம் முதல் தான் உப்பு விளைச்சல் நன்றாக ஆரம்பமாகும் காலம் ஆகும். ஏற்கனவே டிசம்பர் மாதம் பெய்த அதீத கனமழையில் இருந்து தற்போது தான் தூத்துக்குடி மாவட்டம் மீண்டு வருகிறது என்பது குறிப்பிடதக்கது.
இன்று அதிகாலை முதலே வானம் மேக மூட்டத்துடன் தூத்துக்குடி மாநகரத்தில் காணப்பட்டது. அதன் பிறகு சாரல் மழையானது காலை 7 மணி வரை பெய்தது. அதேபோல் ராஜபாளையத்திலும் இடி மின்னலும் கூடிய மிதமான மழை பெய்தது. தமிழகத்தில் அடுத்த மூன்று மணி நேரத்தில் விருதுநகர், தென்காசி, மதுரை ஆகிய மூன்று மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.