• Wed. Nov 26th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

9 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு

Byவிஷா

Nov 6, 2024

தமிழகத்தில் தஞ்சாவூர், ராமநாதபுரம் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது..,
மன்னார் வளைகுடா மற்றும் அதையொட்டிய இலங்கை பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. அதேபோல, தெற்கு வங்கக் கடலின் மத்தியப் பகுதிகளின் மேல் மற்றொரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இவற்றின் தாக்கத்தால் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இன்று இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
கடலோரப் பகுதிகளில் சில இடங்களிலும், உள் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் நாளை இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் நாளை ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 91.4 டிகிரி, குறைந்தபட்ச வெப்பநிலை 77-78.8 டிகிரி பாரன்ஹீட் அளவில் இருக்கும்.
தெற்கு வங்கக் கடலின் வடக்குப் பகுதிகள் மற்றும் அதையொட்டிய மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் இன்றும், வடதமிழகம் மற்றும் தெற்கு ஆந்திராவையொட்டிய தெற்கு வங்கக் கடலின் வடக்கு பகுதிகள் மற்றும் அதையொட்டிய மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் வரும் 7, 8-ம் தேதிகளில் அதிகபட்சமாக மணிக்கு 55 கி.மீ. வேகத்தில் பலத்த சூறாவளிக் காற்று வீசக்கூடும். எனவே, இந்தப் பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.

தமிழகத்தில் நவ. 5-ம் தேதி (நேற்று) காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவுகளின்படி அதிகபட்சமாக கன்னியாகுமரி மாவட்டம் அடையாமடை, கோவை மாவட்டம் பில்லூர் அணை பகுதிகளில் 8 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.