• Sat. Sep 12th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

தமிழகத்தில் இன்று 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

Byவிஷா

Apr 8, 2025

தென்கிழக்கு வங்கக் கடலில் இருந்து தமிழக தென்மாவட்டங்கள் வரை ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுவதால், தமிழகத்தில் இன்று 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்..,
தெற்கு வங்கக்கடலின் மையப்பகுதியில், நேற்று காலை 8:30 மணிக்கு, காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. அத்துடன், தென்கிழக்கு வங்கக்கடலில் இருந்து, தென்மேற்கு வங்கக்கடல் வழியாக, தமிழக தென்மாவட்டங்கள் வரை, ஒரு வளி மண்டல சுழற்சி நிலவுகிறது.
இதன் காரணமாக, தமிழகத்தில் ஒரு சில இடங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்காலில், இன்று இடி, மின்னலுடன், மணிக்கு, 40 கி.மீ., வேகத்தில் சூறாவளி காற்றுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய ஐந்து மாவட்டங்களில், ஒரு சில இடங்களிலும், காரைக்காலிலும் இன்று கனமழை பெய்யலாம். இந்த நிகழ்வால், 13ம் தேதி வரை, தமிழகத்தில் ஒரு சில இடங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் மிதமான மழை தொடரலாம்.
எனினும், தமிழகத்தில் இன்றும், நாளையும், ஒரு சில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை, இயல்பான அளவை விட, 3 டிகிரி செல்ஷியஸ் வரை அதிகரிக்கும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்; ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
நேற்று மாலை நிலவரப்படி, தமிழகத்தில் அதிகபட்சமாக வேலூரில் 101 டிகிரி பாரன்ஹீட், அதாவது 38.6 டிகிரி செல்ஷியஸ் வெப்பம் பதிவானது.
சேலம், திருப்பத்தூரில் தலா 100 டிகிரி பாரன்ஹீட் பதிவாகியுள்ளது.