• Fri. Apr 26th, 2024

பருவமழை பாதிப்பு உள்ள பகுதிகளில் மத்திய குழு ஆய்வு

Byகாயத்ரி

Nov 22, 2021

பருவமழை பாதிப்புகளை பார்வையிட சென்னை வந்துள்ள மத்தியக் குழு, இன்று முதல் பாதிப்பு பகுதிகளில் ஆய்வு செய்ய உள்ளது.


தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர் மற்றும் டெல்டா மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இதற்காக தமிழக அரசு சார்பில் மத்திய அரசிடம், 2,629 கோடி ரூபாய் நிவாரண நிதி கேட்கப்பட்டுள்ளது.

மழை பாதிப்பு தொடர்பாக ஆய்வு செய்ய , மத்திய உள்துறை இணைச் செயலாளர் ராஜீவ் சர்மா தலைமையிலான 7 பேர் கொண்ட மத்திய குழுவினர் தமிழக தலைமை செயலாளர் இறையன்புவை சந்தித்து ஆலோசனை நடத்தினர்.அவர்களிடம் வெள்ள பாதிப்பு குறித்து இறையன்பு விளக்கிய நிலையில், சென்னை மாநாகராட்சித் தலைமை அலுவலகமான ரிப்பன் மாளிகைக்கு மத்திய குழுவினர் சென்றனர், அங்கு மழை பாதிப்புகளை விளக்கும் வகையில் வைக்கப்பட்டிருந்த புகைப்படங்களை பார்வையிட்டனர்.

மத்தியக் குழுவினர் இரண்டாக பிரிந்து, இரண்டு நாட்களுக்கு மாவட்ட வாரியாக ஆய்வு மேற்கொள்கின்றனர். காலை 9 மணி முதல் மதியம் ஒரு மணி வரை, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் ஒரு குழு ஆய்வு செய்கிறது.மாலையில் புதுச்சேரியில் ஆய்வை தொடர உள்ளது. மற்றொரு குழு கன்னியாகுமரி மாவட்டத்தில் பகல் 2 மணிக்கு மேல் ஆய்வு செய்ய உள்ளது. நாளை கடலூர் மாவட்டத்தில் காலையிலும், மயிலாடுதுறை மாவட்டத்தில் நண்பகலிலும் மத்தியக் குழு ஆய்வு செய்யும்.


பகல் 2.30 மணியில் இருந்து நாகப்பட்டினம், திருவாரூர் மற்றும் தஞ்சாவூர் மாவட்டக்களில் ஒரு குழு ஆய்வு செய்யும். மற்றொரு குழு வேலூர் மற்றும் ராணிப்பேட்டையில் பிற்பகல் முதல் ஆய்வு நடத்த திட்டமிட்டுள்ளது.இரண்டு நாட்கள் ஆய்வுக்கு பிறகு, 24ஆம் தேதி சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்திக்கும் மத்தியக் குழுவினர், அன்று மாலையே டெல்லிக்கு புறப்படுகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *