• Sat. Apr 20th, 2024

சினிமாவில் ஜாதி பார்க்கப்படுகிறது- நடிகர் அபி சரவணன் ஆதங்கம்

Byதன பாலன்

Feb 13, 2023

இதுவரை ஒரு வளரும் நடிகராக இருந்து 20 படங்களுக்கு மேல் நடித்துள்ள அபி சரவணன் இப்போது விஜய் விஷ்வா என பெயர் மாற்றியுள்ளார் அவர் நடித்துள்ள ‘பரபரப்பு’ மற்றும் ‘கும்பாரி’ படங்களின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்களை இன்று நடிகர்கள் விஷால் , விஜய் சேதுபதி, நட்டி நடராஜ் ஆகியோர் வெளியிட்டுள்ளனர் இது சம்பந்தமாக சரவணன் கூறுகிறபோது

“நான் கடந்த டிசம்பர் 2021-ல் அபிசரவணன் ஆக இருந்தபோது ஏதோ என்னிடம் குறைவது போல் உணர்ந்தேன். நம்பிக்கையாக சொல்லிக் கொள்ளும்படியான பட வாய்ப்புகள் பற்றி என்னால் அப்போது பேச முடியவில்லை. 2022-ல் விஜய் விஷ்வாவாக மாறி இப்போது நான் நடித்து வெளியாகும் அளவிற்கு பரபரப்பு, கும்பாரி என இரண்டு
படங்கள் கையில் உள்ளன.அது மட்டுமல்லாமல் வெப் சீரிஸ், புதிய படங்கள் என வரிசையாக வாய்ப்புகள் வந்துள்ளன.
அந்த வகையில் எனக்கு இந்தப் பெயர் மாற்றம் வாழ்க்கையிலும் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது என்றே கூற வேண்டும்.அபி சரவணன் என்ற பெயரில் எனக்கு எந்த வெறுப்புமில்லை. ஆனால் இசையமைப்பாளர் ஜிப்ரானின் தந்தை இப்படிப் பெயர் மாற்றினால் நன்றாக இருக்கும் என்று கூறிய ஆலோசனைப்படி இதை மாற்றி இருக்கிறேன்.
பரபரப்பு படத்தில் நான் முதன் முதலாக போலீஸ்கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன்.
கும்பாரி படத்தில்நான் மீனவர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன். முழுக்க முழுக்க கன்னியாகுமரியில் கடலும் கடல் சார்ந்த பகுதி என்கிற பின்னணியில் எடுக்கப்பட்டுள்ள படம்.இந்தப் படம் தமிழ், மலையாள மொழிகளில் உருவாகியுள்ளது.
வெப் சீரீஸ் இரண்டில் நான் நடித்து வருகிறேன். அந்த வகையில் புதிய பெயர் புதிய வாழ்க்கை புதிய வாய்ப்புகள் என்று மாற்றத்தை நான் உணர்கிறேன்.ஒரு முன்னேற்றத்திற்கான முதல் முதல் படி என்றுதான் இதைச் சொல்ல வேண்டும். இன்னும் பல படிகள் மேலேற வேண்டும். எனக்கு முன்பாக நூறு பேர் ஓடிக் கொண்டிருக்கிறார்கள். நானும் நூறாவதாக ஓடுகிறேன் என்பதில் எனக்குப் பெருமை. ஆனால் எனது முயற்சியால் உழைப்பால் பல படிகள் மேலேறுவேன் என்பது எனது நம்பிக்கை. நான் நடித்த பிரம்ம முகூர்த்தம் என்ற படம் வெளியாக இருக்கிறது. விஜய் இயக்கியிருக்கிறார். அது முழு இரவில் நடக்கும் கதை .வித்தியாசமான அனுபவம்.
அடுத்து வானவன் என்கிற படம், இன்னொரு வாய்ப்பு. மூன்று மணி நேரத்தில் ஒரு இரவில் நடக்கும் கதை இது.இதற்காக 40 நாட்கள் இரவு முழுவதும் படப்பிடிப்பில் கலந்து கொண்டேன். அப்போது வானவன் படத்திற்காக முழுக்க முழுக்க இரவில் நடித்துவிட்டு , பரபரப்பு படத்திற்காக பகலில் நடிக்கச் செல்வேன். இப்படி மூன்று நான்கு நாட்கள் தூக்கமில்லாமல் தொடர்ச்சியாக நான் நடித்திருக்கிறேன் என்றவரிடம்
இத்தனை ஆண்டு திரை உலகப் பழக்கத்தில் பெரிய இயக்குநர்கள் ஏன் உங்களுக்கு வாய்ப்பு கொடுப்பதில்லை ? என்று கேட்ட போது,

”என்னைக் கேட்டால் சாலிகிராமத்தில் வாய்ப்பு தேடிக் கொண்டிருக்கும் ஒவ்வொரு உதவி இயக்குநரும் பெரியஇயக்குநர்கள் தான். படம் இயக்கியவர்களையும் அப்படித்தான் சொல்வேன். அவர்களுக்கான நேரம் காலம் சரியாக அமையும் போது அவர்கள் பெரிய இயக்குநர்களாக வருகிறார்கள்.எனவே நான் பெரிய சிறிய என்று பிரித்துப் பார்ப்பதில்லை.வளர்ந்த இயக்குநர்கள் எனது வாய்ப்பு பற்றிக் கூறும் போது அனைவரும் சொல்லும் பதில் இதுதான். நீங்கள் வளர்ந்து விட்டீர்கள் எல்லாருக்கும் முகம் தெரிந்த கதாநாயகன் ஆகிவிட்டீர்கள். எங்கள் படங்களில் அதற்கான வாய்ப்பு வரும்போது சொல்கிறோம்.இதைத்தான் பதிலாகச் சொல்கிறார்கள்”என்றார்.

உங்களுக்குச் சரியான திருப்பு முனைப் படங்கள் அமையாத காரணம் என்ன? என்று கேட்டபோது.

“நான் என்னை வைத்து படங்கள் இயக்கிய இயக்குநரையோ தயாரிப்பாளரையோ குறை சொல்ல மாட்டேன் . அவர்கள் சொன்ன கதையில் அவர்கள் தயாரிப்புத் திட்டத்தில் நான் நம்பிக்கை வைத்து நடித்தேன்.அவர்கள் தங்கள் கடமைகளைச் சரியாகத்தான் செய்தார்கள் என்று தான் சொல்வேன். இயக்குவதில் இயக்குநரும் செலவுகளைச் செய்வதில் தயாரிப்பாளரும் எந்தக் குறைகளையும் வைக்கவில்லை.அந்த வகையில் நான் நடித்து சமீப காலங்களில் கேரள நாட்டிளம் பெண்களுடனே,டூரிங் டாக்கீஸ் ,சாயம் என மூன்று படங்கள் வந்திருந்தாலும் அவை மக்களைச் சரியாக சென்றடையவில்லை என்று சொல்ல வேண்டும் .அதற்குத் திரை உலகில் காட்டப்படும் பெரிய படம், சிறிய படம் என்ற பாகுபாடு ஒரு காரணம் என்பேன். சிறிய படங்களுக்கு ஒதுக்கப்படும் திரையரங்குகளும் காட்சிகளுக்கான நேரமும் பெரிய பிரச்சினையாக உள்ளது.பெரிய படமாக இருந்தாலும் சிறிய படமாக இருந்தாலும் எல்லாரும் ஒரே மாதிரி தான் உழைக்கிறார்கள். ஆனால் வெளியிடுவதில் பாகுபாடு காட்டுகிறார்கள். போஸ்டர் ஒட்டுவதில் கூட இந்தப் பாகுபாடு இருக்கிறது. அதிகாலை 2 மணிக்கு எனது போஸ்டர் ஓட்டினால் இரண்டு பத்துக்கு இன்னொரு படத்தின் போஸ்டரை அதன் மேலேயே ஒட்டுகிறார்கள்.தயாரிப்பாளர் சங்கம் முன் வந்து இந்த விஷயத்தில் தலையிட்டு சரியான வரைமுறைகளை வகுக்க வேண்டும். அப்பொழுதுதான் இந்தப் பாகுபாடு மறையும் என்று நான் நினைக்கிறேன்.சிறிய படங்கள் ஓடுவதற்கு ஒரு வார காலமாவது அவகாசம் தர வேண்டும்.

சினிமாவில் சாதி பார்க்கப்படுகிறதா? என்று கேட்டபோது,

“சிலர் இப்படித் தங்கள் சாதியை உயர்த்திப் பிடிக்கிறார்கள்.அப்படிப்பட்ட படங்கள் எடுக்கிறார்கள்.எல்லாருமே இப்படிப் பார்க்கிறார்கள் என்று சொல்ல முடியாது. ஆனால் சினிமாவில் சாதி பார்க்கப்படுகிறது என்கிற உண்மையை ஒப்புக்கொள்ளவே வேண்டும்.” என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *