போடியில், கொரோனா வழிகாட்டுதல் நெறிமுறைகளை மீறி பிரசாரக் கூட்டம் நடத்தியதாக, தி.மு.க., வடக்கு மாவட்ட செயலாளர் தங்கதமிழ்செல்வன் உட்பட சிலர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
நகர்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு, கடந்த 10ம் தேதி, தேனி மாவட்டத்தில் நகராட்சி, பேரூராட்சிகளில் போட்டியிடும் தி.மு.க., வேட்பாளர்களை ஆதரித்து, அமைச்சர் ஐ.பெரியசாமி பிரசாரம் செய்தார். போடியில் இவரது வருகையால் கூட்டம் களை கட்டியது. மாலை 5 மணியளவில் கட்டபொம்மன் சிலையருகே நடந்த பிரசாரக் கூட்டத்தில், தி.மு.க., வடக்கு மாவட்ட செயலாளர் தங்கதமிழ்செல்வன், போடி நகர செயலாளர் செல்வராஜ் உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் திரண்டனர். கொரோனா வழிகாட்டுதல் நெறிமுறைகளை மீறி இக்கூட்டம் நடந்தது. இதுகுறித்து நகராட்சி பறக்கும் படை அலுவலர் வினோத் குமார் போடி நகர் போலீசில் புகார் செய்தார். அவரது புகாரின்படி, தங்கதமிழ்செல்வன் உட்பட பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.