சாலைக்கிராமத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் ஊழியர்களை பணி செய்ய விடாமல் தடுத்ததாக பாஜகவினர் 2 பேர் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிவகங்கை மாவட்டம், இளையான்குடி அருகே சாலைக்கிராமத்தில் நேற்று சனிக்கிழமை மெகா கொரானா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இந்நிலையில் தடுப்பூசி முகாமில் உள்ள பேனரில் முன்னாள் முதல்வர் கலைஞர் மற்றும் முதல்வர் ஸ்டாலின் படம் இருந்ததை பார்த்த பாஜகவினர் பாரத பிரதமர் நரேந்திர மோடியின் படம் எங்கே எனக் கேட்டு மருத்துவமனை ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு பின்னர் முதல்வர் ஸ்டாலின் படம் பதித்த பேனரை அரசு மருத்துவமனையில் இருந்து அகற்றியதாக கூறப்படுகிறது.
இது குறித்து சாலைக்கிராமம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் கௌதம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், அரசு ஊழியர்களை பணி செய்ய விடாமல் தடுத்தது உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் பாஜக கட்சி சார்ந்த கோவிந்தன், பாலா என்ற செல்லக்குட்டி பாலா ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் இது குறித்து விசாரணை செய்து வருகின்றனர். மேலும் இச்சம்பவத்தில் ஈடுபட்ட வேறு சிலரையும் தேடி வருகின்றனர்,