கடந்த இரண்டு ஆண்டுகளாக ஏலக்காய் விலை ஏற்றம் பெறாததால் இடுக்கி மற்றும் போடிநாயக்கனூரில் ஏலக்காய் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
கொரோனா ஊரடங்கால் கடந்த 2020 ஆண்டு மார்ச் மாதம் முதல் ஏலக்காய் விற்பனை முடங்க ஆரம்பித்தது. அப்போது தமிழகம் மற்றும் கேரள மாநில எல்லைகள் அடைக்கப்பட்டதால் தமிழக ஏலக்காய் வியாபாரிகள் வருகை குறைந்து. வியாபாரிகள் ஏலக்காயை வாங்கினாலும், வெளிநாட்டு ஏற்றுமதி முடங்கியதால் ஏற்றுமதி செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. இந்த சிக்கல்களால், கடந்த இரண்டு ஆண்டுகளாக ஏலக்காய் கிலோ 1,200 ரூபாய்க்கும் கீழேயே இருந்தது.
இந்நிலையில் தற்போது ஒருநாள் விட்டு ஒரு நாள் ஏலக்காய் ஏலம் துவக்கப்பட்டது. இதையடுத்து ஏலக்காய் விலை ஏற்றம் பெறும் என விவசாயிகள் எதிர்பார்த்த நிலையில் ஏமாற்றம் மட்டுமே மிஞ்சியது.
இதனால் தற்போது ஏலக்காய் கிலோ அதிகபட்சமாக 1,500 ரூபாய்க்கும், சராசரியாக கிலோ 950 ரூபாய்க்கும் விலை போகிறது. இதனால் ஏலக்காய் விலை விவசாயிகள் மட்டுமின்றி, இடுக்கியில் அதிக ஏலத்தோட்டங்கள் வைத்திருக்கும் தமிழக விவசாயிகளும் ஏமாற்றமடைந்துள்ளனர்.