இரட்டை இலை சின்னம் பெறுவதற்காக தேர்தல் ஆணையத்திற்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கினை டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் விசாரணை நடத்தி வருகிறது.
இந்த விசாரணைக்கு எதிராக டெல்லி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் மீது மே 20ஆம் தேதியன்று விசாரணை நடைபெறும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுகவின் பொதுச் செயலாளராக கடந்த 2016ஆம் ஆண்டு டிசம்பர் 31ஆம் தேதி முறைப்படி சசிகலா பொறுப்பேற்றார். அதன்பிறகு அவருக்கு வந்த எதிர்ப்புத்தான் இரட்டை இலைச் சின்ன விவகாரத்திற்கு ஆரம்ப வித்திட்டது.
அடுத்த சில நாட்களில் சசிகலா தேர்வு அதிமுக சட்டவிதிகளுக்கு புறம்பானது என்று கூறி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கேசி பழனிசாமி தேர்தல் ஆணையத்தில் மனு அளித்தார். 2017ஆம் ஆண்டு பிப்ரவரி 7ஆம் தேதி அதிமுக பிளவுபட்டது. சசிகலா தலைமையில் ஒரு அணியும், ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் ஒரு அணியுமாக அதிமுக இரண்டானது.
ஆர்கேநகர் இடைத்தேர்தலில் இரட்டை இலைச் சின்னத்தை தங்களுக்கு ஒதுக்க வேண்டும் என ஓ. பன்னீர்செல்வம் அணியினர் தேர்தல் ஆணையத்திடம் மனு அளித்தனர். ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி மேற்பார்வையில் அதிமுக நிர்வாகிகள் தேர்தலை நடத்தி வெற்றி பெறும் அணியிடம் இரட்டை இலைச் சின்னத்தை ஒப்படைக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரி, திருச்செந்தூரைச் சேர்ந்த ராம்குமார் ஆதித்தன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார்.
2016ஆம் ஆண்டு மார்ச் 23 ஆம் தேதியன்று அஇஅதிமுக பெயர், இரட்டை இலை சின்னத்தை பயன்படுத்த தேர்தல் ஆணையம் தடை விதித்தது. ஏப்ரல் 9ஆம் தேதி தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி வாக்காளர்களுக்கு பணம் கொடுத்ததாக எழுந்த புகாரை தொடர்ந்து ஆர்கே நகர் இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டது.
அடுத்த சில நாட்களில் டிடிவி தினகரனை கட்சியில் இருந்த ஒதுக்கி வைப்பதாக, எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அமைச்சர்கள் முடிவு செய்தனர். 2017ஆம் ஆண்டு ஏப்ரல் 26ஆம் தேதி இரட்டை இலை சின்னத்தை பெறுவதற்காக தேர்தல் ஆணையத்திற்கு லஞ்சம் கொடுத்ததாக டிடிவி தினகரனை டெல்லி போலீசார் கைது செய்தனர். திகார் சிறையில் அடைக்கப்பட்டார் டிடிவி தினகரன், சில மாதங்கள் கழித்து டிடிவி தினகரன் திகார் சிறையில் இருந்து ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
ஓபிஎஸ், இபிஎஸ் தலைமையிலான அணிகள் இணைந்த பின்னர் அதிமுக மீண்டும் ஒன்றாகவே சின்னமும் கொடியும் ஒருங்கிணைந்த அதிமுகவிற்கு ஒதுக்கப்பட்டது. கடந்த 2017 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்ட சுகேஷ் சந்திரா, திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.
சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் இந்த வழக்கு நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் சுகேஷ் சந்திரசேகர், டிடிவி தினகரன் உள்ளிட்ட 9 பேர் மீது டெல்லி குற்றப்பிரிவு காவல்துறை குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தது. அவற்றில் 4 பேர் மீதான குற்றச்சாட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டு, மற்றவர்கள் விடுவிக்கப்பட்டனர். இதனிடையே, இந்த வழக்கு விசாரணைக்கு டெல்லி உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது.
இரட்டை இலைச் சின்னத்தைப் பெறுவதற்கு தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில், சுகேஷ் சந்திரசேகருக்கு உச்சநீதிமன்றம் கடந்த 2020ஆம் ஆண்டு 2 வார கால இடைக்கால ஜாமீன் வழங்கியது. இந்த வழக்கு மட்டுமல்லாமல் சுகேஷ் சந்திரசேகர் மீது பொருளாதார குற்றத் தடுப்பு பிரிவு, சி.பி.ஐ., அமலாக்கத்துறை ஆகியவற்றில் மோசடி வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதனையடுத்து மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார் சுகேஷ் சந்திரசேகர்.
இரட்டை இலை சின்னம் பெறுவதற்காக தேர்தல் ஆணையத்திற்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கினை டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் விசாரணை நடத்தி வருகிறது. இந்த விசாரணைக்கு எதிராக டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருக்கின்றன. இதுகுறித்து சுகேஷ் சந்திரசேகர், டி.டி.வி. தினகரன், பி. குமார், மல்லிகார்ஜுன் ஆகியோர் தாக்கல் செய்த மனுக்கள் டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி சந்திர தாரி சிங் அமர்வு முன்பாக நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுக்களை பரிசீலித்த டெல்லி உயர்நீதிமன்றம், இரட்டை இலை சின்னத்தை பெறுவதற்காக தேர்தல் ஆணையத்திற்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெறும் விசாரணைக்கு எதிரான மனுக்கள் மீதான விசாரணையை மே 20-ஆம் தேதிக்கு தள்ளிவைத்து உத்தரவிடப்பட்டது.