“நீண்ட இடைவேளைக்கு பிறகு தமிழ்த் திரையுலகத்திற்குத் திரும்பும் மலையாள நடிகையான பாவனா நடிக்கும் திரில்லர் ஹாரர் திரைப்படத்தில் கணேஷ் வெங்கட்ராம் நாயகனாக நடிக்கிறார்.‘அபியும் நானும்’ படம் மூலம் அறிமுகமாகி, உலகநாயகன் கமல்ஹாசனின் ‘உன்னைப்போல் ஒருவன்’, ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சி என மக்கள் மனங்களை வென்ற நடிகர் கணேஷ் வெங்கட்ராம் தற்போது விஜய் நடிப்பில் வெளியான ‘வாரிசு’ படத்தில் வில்லனாக கலக்கியிருக்கிறார்.தமிழில் முதல் முறையாக வில்லனாக நடித்திருக்கும் அவரது பாத்திரம், ரசிகர்கள் மற்றும் திரைப் பிரபலங்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.இதைத் தொடர்ந்து தற்போது நீண்ட நீண்ட இடைவேளைக்கு நடிகை பாவனா நடிக்கும் திரில்லர் ஹாரர் திரைப்படத்தில் முதன்மை கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார் நடிகர் கணேஷ் வெங்கட்ராம்.
இது குறித்து நடிகர் கணேஷ் வெங்கட்ராம் பேசும்போது, “வாரிசு’ படத்தின் வரவேற்பு எனக்கு மிகப் பெரிய மகிழ்ச்சியை தந்துள்ளது. தெலுங்கு, இந்தி, மலையாளம் சினிமாவில் பலவிதமான கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளேன். தமிழில் நமக்கு வித்தியாசமான கதாப்பாத்திரம் கிடைப்பதில்லையே என நினைத்திருக்கிறேன்.
ஆனால் அது ‘வாரிசு’ மூலம் நிறைவேறியிருப்பது மகிழ்ச்சி. அதிலும் இப்படத்தில் எனது கேரக்டரின் ஸ்கிரீன் பிரசன்ஸ் அட்டகாசமாக இருந்ததாக அனைவரும் பாராட்டினார்கள். இது எனக்கு மிகப் பெரிய மகிழ்ச்சியை அளித்துள்ளது.இப்போது ‘வாரிசை’ தொடர்ந்து, பல வித்தியாசமான கதபாத்திரங்கள் தமிழில் வர ஆரம்பித்திருக்கிறது. சில படங்களில் முழுக்க என் லுக்கை மாற்றிக் கொண்டு நடிக்கிறேன்.
‘வாரிசு’ படத்திற்கு பிறகு இப்போது இயக்குநர் ஜெய்தேவ் இயக்கத்தில் ஒரு ஹாரர் திரில்லர் படத்தில் முதன்மை பாத்திரத்தில் நடிக்கிறேன். இப்படத்தில் நடிகை பாவனா நீண்ட இடைவேளைக்கு பிறகு தமிழில் நடிக்கிறார்
கொடைக்கானல் மற்றும் சென்னை பகுதிகளில் நடக்கும் கதைதான் படம். ‘அனபெல்லா சேதுபதி’ படத்தின் ஒளிப்பதிவாளர் கௌதம் ஜார்ஜ் ஒளிப்பதிவு செய்கிறார்.
இப்படம் ரசிகர்களுக்கு முற்றிலும் ஒரு புது அனுபவமாக இருக்கும். அடுத்தடுத்து பல சுவாரஸ்யமான படைப்புகள் எனது நடிப்பில் வரவுள்ளது. விரைவில் அது பற்றிய அறிவிப்புகளும் வரும்…” என்றார்.