தேனி மாவட்டம் கடமல-மயிலை ஒன்றியம் வருசநாடு, முருக்கோடை, முத்தாலம்பாறை, தொப்பையாபுரம், அருகவெலி, உள்ளிட்ட பகுதிகளில் பீன்ஸ், அவரை விவசாயம் அதிக அளவில் நடைபெற்று வருகிறது. தற்போது சீசன் தொடங்க உள்ள நிலையில் பீன்ஸ், அவரை கொடிகளில் மஞ்சள் நோய் தாக்கம் ஏற்பட்டு வருகிறது. இந்த நோய் தாக்கப்பட்ட கொடிகளில் இலைகள் மஞ்சள் நிறத்திற்கு மாறி தானாக உதிர்ந்து கீழே விழுந்து விடுகிறது. விவசாயிகள் பல்வேறு மருந்துகளை தெளித்து கொடிகளை பாதுகாத்து வருகின்றனர். இருப்பினும் எந்தவித மருந்துக்கும் கட்டுப்படாமல் மஞ்சள் நோய் வேகமாக பரவி வருகிறது. இதுதொடர்பாக பாதிப்படைந்த விவசாயிகள் கூறுகையில் – வருடம் தோறும் நவம்பர், டிசம்பர் மாதங்களில் அதிக அளவில் பீன்ஸ், அவரை உள்ளிட்ட விவசாயம் நடைபெறும். ஆனால் ஆண்டுதோறும் மஞ்சள் நோய் தாக்கம் கட்டுப்படுத்த முடியாத அளவில் பரவி வருகிறது. இதனால் விவசாயிகளுக்கு 50 ஆயிரம் முதல் 1 லட்சம் ரூபாய் வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக வேளாண்மைத்துறை அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து மஞ்சள் நோயை கட்டுப்படுத்த வேண்டும் அல்லது பாதிப்படைந்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.