வங்கி ஊழியர்கள் அடிக்கடி இடமாற்றம் செய்யப்படுவதை கண்டித்து சென்னையில் இன்று வங்கி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.
வங்கி கொள்கைவிதிகள், ஒப்பந்தத்தை மீறி வங்கி ஊழியர்கள் இடம் மாற்றம் செய்யப்படுவதை கண்டித்து சென்னை எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகில் அகில இந்திய வங்கி ஊழியர் சங்கம் சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது. அகில இந்திய வங்கி ஊழியர் சங்க பொது செயலாளர் சி.எச். வெங்கடாசலம் தலைமை வகித்தார்.வங்கி ஊழியர்கள் 100- க்கும் மேற்பட்டோர்கள் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் வங்கி நிர்வாக முடிவுகளை கண்டித்து கோஷங்கள் எழுப்பினார்கள்.
அகில இந்திய வங்கி ஊழியர் சங்க பொது செயலாளர் சி.எச்.வெங்கடாசலம் பேசும் போது… இடமாற்ற கொள்கையை மீறி வங்கி ஊழியர்கள் இடமாற்றம் செய்யப்பட்டு பழிவாங்கப்படுகிறார்கள். தவறான இடமாற்ற உத்தரவுகளை வாபஸ் வாங்க வேண்டும். தொழிலாளர் நலசட்டங்களை அவமதிக்க கூடாது. வங்கி நிர்வாகத்தின் தொழிலாளர் விரோத கொள்கை கைவிடப்பட வேண்டும். மேலும் பெண் ஊழியர்களின் இடமாற்ற உத்தரவுகளைஉடனே ரத்து செய்ய வேண்டும். சென்ட்ரல் வங்கி நிர்வாகத்தின் அதிகார ஆணவப் போக்கை கைவிட வேண்டும். வங்கியின் நலனுக்காக நாள்தோறும் உழைத்திடும் ஊழியர்களை பழிவாங்க கூடாது. நீதிமன்ற உத்தரவுகளை புறக்கணிக்க கூடாது. சென்ட்ரல் வங்கி நிர்வாகம்மாற்றிக்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.