ஆண்டிபட்டி கணவாய் மலைப்பகுதியில் கொரோனா பரிசோதனை செய்பவருக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டு வருகிறது.
தேனி மாவட்டை ஒட்டியுள்ள கேரளாவில் கொரோனா 2வது அலை கோரதாண்டவம் ஆடி வருகிறது. கேரளாவிலிருந்து தேனிக்கும், மதுரைக்கும் ஆயிரக்கணக்கான மக்கள் வாகனங்களில் தினமும் சென்று வருவதால், கண்காணிப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. கேரளாவில் இருந்து தமிழகம் வந்து, செல்பவர்களுக்கு தொற்று இல்லை என்ற கொரோனா சான்றிதழ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
கேரளாவிலிருந்து தொற்று தேனி மாவட்டத்தில் பரவுவதை தடுக்கும் விதமாக தேனி , மதுரை மாவட்டங்களின் இடையே கணவாய் பகுதியில் எம். சுப்புலாபுரம் அரசு ஆரம்பசுகாதார நிலையம் சார்பாக காவல்துறை சோதனைச்சாவடி அருகே தனிமுகாம் அமைத்து,கொரோனோ தொற்று சோதனையை நடத்தி வருகிறார்கள். கொரோனா பரிசோதனைக்கு வருபவர்களை ஊக்குவிக்கும் விதமாக மக்களைத் தேடி மூலிகைச்செடிகள் வழங்கும் திட்டத்தின் கீழ், தேசிய குழந்தைகள் நலதிட்ட மருந்தாளுனர் ரஞ்சித்குமார் சார்பில் இலவசமாக முகக்கவசங்களும், கற்றாழை, கரிசலாங்கண்ணி, கருந்துளசி, கற்பூரஇலை, ஆடாதொடை, தூதுவளை, உள்ளிட்ட மரக்கன்றுகளும் வழங்கப்பட்டு வருகிறது.