• Thu. May 9th, 2024

பொள்ளாச்சியில் வடிவேல் பட பாணியில் கொள்ளை முயற்சி!

பொள்ளாச்சி, சேத்துமடை அண்ணா நகர் பகுதியில் உள்ள உச்சிமாகாளி அம்மன் கோவிலில் பூசாரியாக இருப்பவர் குமார்(45)! இவர் நேற்று காலை பூஜை செய்வதற்காக கோவிலுக்கு வந்தபோது, கருவறையின் கதவு உடைக்கப்படும் சத்தம் கேட்டது.

உள்ளே சென்று பார்த்தபோது, வாலிபர் ஒருவர் அம்மன் கையில் இருந்த, சூலாயுதத்தை திருடி கொண்டிருந்தார். இதைத்தொடர்ந்து, குமார் வெளியில் வந்து சத்தம் போட்ட நிலையில், அப்பகுதியில் மக்கள் கூடினர்!

சூலாயுதத்தை திருடி வெளியேவந்த திருடன் மக்கள் கூட்டத்தைப் பார்த்ததும், ‘சுந்தரபுருஷன்’ திரைப்படத்தில் வடிவேலு வேலை திருடி விட்டு சாமியாடுவது போல், நடித்து நாடகமாடினார்!சுதாரித்துக்கொண்ட மக்கள், அவரை பிடித்து ஆனைமலை போலீசில் ஒப்படைத்தனர்.

தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில், அவர் அதே பகுதியை சேர்ந்த ஜேசுதாஸ்(24) என்பதும், கூலித் தொழிலாளியாக இருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்து, சிறையில் அடைத்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *