சென்னையில் சட்டக்கல்லூரி மாணவர் அப்துல்ரஹீம் என்பவர் கடந்த சில தினங்களுக்கு முன்னர் தாக்கப்பட்டது தொடர்பாக, பெண் காவல் ஆய்வாளர் நஜீமா உட்பட 9 காவலர்கள் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
சட்டக்கல்லூரி மாணவர் அப்துல்ரஹீம் முகக்கவசம் அணியாமல் சென்றபோது, வாகன சோதனையில் ஈடுப்பட்டிருந்த கொடுங்கையூர் போலீசார் மாணவரிடம் விசாரணை நடத்தினார்கள்.அப்போது வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், மாணவரை கொடுங்கையூர் காவல்நிலையத்துக்கு அழைத்து சென்று காவலர்கள் தாக்கியதாக கூறப்படுகிறது. இது தொடர்பான வீடியோ காட்சிகளும் இணையத்தில் வைரலானது! இதற்கிடையில், சம்மந்தப்பட்ட காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சட்டக்கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இதனைத் தொடர்ந்து, இந்த விவகாரத்தில் உருத்திரகுமார் மற்றும் பூமிநாதன் என 2 காவலர்கள் ஏற்கனவே பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். மேலும், காவல் ஆய்வாளர் நஜீமா,ராஜன் உள்ளிட்டோர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கவும் சென்னை காவல் ஆணையர் உத்தரவிட்டு இருந்தார்.
இந்நிலையில், பாதிக்கப்பட்ட மாணவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் பயங்கர ஆயுதங்களால் தாக்குதல், காயம் ஏற்படுத்துதல், ஆபாசமாக திட்டுதல் உள்ளிட்ட பிரிவுகளின்கீழ் பெண் காவல் ஆய்வாளர் நஜீமா உட்பட 9 காவலர்கள் மீது கொடுங்கையூர் காவல்நிலையத்திலேயே வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, இது தொடர்பாக ஆர்டிஓ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு உள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.