• Mon. May 12th, 2025

பல்கலைக்கழக வேந்தராக கவர்னரே தொடர்வதாக அறிவிப்பு

Byவிஷா

Apr 21, 2025

தமிழ்நாட்டில் பல்கலைக்கழக வேந்தராக கவர்னர் ஆர்.என்.ரவியே தொடர்வதாக ராஜ்பவன் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
தமிழ்நாடு அரசின் பல்கலைக்கழக வேந்தர் மற்றும் துணைவேந்தர் தொடர்பான மசோதாக்களுக்கு ஆளுநர் அனுமதி மறுத்த நிலையில், உச்சநீதிமன்றம் தனது சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி அனுமதி வழங்கியது. இதன்முலம் பல்கலைக்கழக வேந்தராக முதல்வர் ஸ்டாலின் இருப்பார் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. அதைத்தொடர்ந்து முதல்வர் ஸ்டாலின் துணைவேந்தர்கள் கூட்டத்தை கடந்த வாரம் கூட்டி, உரையாற்றினார்,.
இத்தகைய சூழ்நிலையில், தமிழ்நாட்டில் பல்கலைக்கழக வேந்தர் கவர்னரே என்றும், எதிர்வரும் 25, 26, 27 ஆகிய தேதிகளில் பல்கலைக்கழக துணைவேந்தர்களின் 3 நாள் மாநாடு நீலகிரி ஆளுநர் மாளிகையில் நடைபெறும் என்றும், இந்த மாநாட்டில் குடியரசு துணைத் தலைவர் பங்கேற்பார் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.
இதனிடையே டெல்லி சென்ற ஆளுநர் ரவி, குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கரை சந்தித்து இந்த மாநாட்டில் பங்கேற்க அழைப்பு விடுத்திருக்கிறார். ஆளுநர் ரவி வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை ஜெகதீப் தன்கர் கடுமையாக விமர்சித்திருந்தார். குடியரசுத் தலைவர் சட்டத்திருத்தங்களுக்கு ஒப்புதல் அளிக்க காலக்கெடு விதிக்க கூடாது என ஜெகதீப் தன்கர் எதிர்ப்பு தெரிவித்திருந்தார்.
ஜெகதீப் தன்கர் விமர்சனத்துக்கு திமுக சார்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்ட்டது. இந்த நேரத்தில் குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் தமிழ்நாடு பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது.
உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு பிறகு துணை வேந்தர்கள் மாநாட்டை நடத்த ஆளுநர் ரவிக்கு அதிகாரம் இல்லை என இதற்கு திமுக உள்ளிட்ட சில அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. ஆளுநர் ரவி நடத்தும் இந்த மாநாட்டால் மீண்டும் தமிழக அரசுக்கும், ஆளுநருக்கும் மோதல் ஏற்பட்டிருக்கிறது.