அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் சென்னை வானகரம் ஸ்ரீவாரு திருமண மண்டபத்தில் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் அவைத்தலைவராக தமிழ் மகன் உசேன் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். கூட்டத்தில் நிறைவேற்றப்பட வேண்டிய அனைத்து தீர்மானங்களும் நிராகரிப்பு என்றும் அடுத்த பொதுக்குழு ஜூலை 11-ந்தேதி கூடும் என்றும் அறிவிக்கப்பட்டது.
பரபரப்பான சூழ்நிலையில் எடப்பாடி பழனிசாமியுடன் அண்ணாமலை சந்தித்து பேசியுள்ளார். சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள எடப்பாடி பழனிசாமி இல்லத்திற்கு சென்ற தமிழக பாரதிய ஜனதா தலைவர் அண்ணாமலை சந்தித்து பேசியுள்ளார். அவருடன் பா.ஜ.க. மேலிட பொறுப்பாளர் சி.டி. ரவி உள்ளிட்ட நிர்வாகிகளும் உடன் இருந்தனர். இச்சந்திப்பின் போது, ஜனாதிபதி தேர்தலில் பா.ஜ.க. வேட்பாளருக்கு ஆதரவு கோரியதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதே போல சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள இல்லத்தில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை மற்றும் நிர்வாகிகள் ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்து பேசியுள்ளனர். அப்போது, ஜனாதிபதி தேர்தலில் பாஜக தேசியக் கூட்டணி சார்பில் போட்டியிடவுள்ள திரௌபதி முர்முவுக்கு ஆதரவுக் கோரி எடப்பாடி பழனிசாமியை சந்தித்த நிலையில், தற்போது ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்து அண்ணாமலை, ஆதரவுக் கோரியுள்ளார்.