மதுரை மாவட்டம் வாடிப்பட்டி, சோழவந்தான், அலங்காநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. முல்லைப் பெரியாறு பாசன கால்வாய் மூலமாகவும் வைகையில் திறந்து விடப்படும் தண்ணீர் காரணமாகவும் பல ஆயிரம் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது.

ஆனால் இந்த ஆண்டு போதிய மழை இல்லாத காரணத்தால் வைகை ஆறானது வறண்டு காணப்படுகிறது. பெரியார் பாசன கால்வாய் மூலம் தண்ணீர் திறக்காததால் வாடிப்பட்டி முதல் அலங்காநல்லூர் வரை உள்ள சுமார் 20,000 ஏக்கர் விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் கூறுகின்றனர்.

இதன் காரணமாக இப்பகுதி விவசாயிகள் தொடர் நஷ்டத்தை சந்தித்து வருகின்றனர், இந்த ஆண்டு முல்லைப் பெரியாறு பிரதான கால்வாய் மற்றும் வைகை ஆற்றில் விவசாய பாசனத்திற்காக தண்ணீர் திறக்கவில்லை.
இதனால் இப்பகுதி விவசாயிகள் விவசாயப் பணிகளை தொடங்க முடியாமல் பரிதவித்து வருகின்றனர். அது மட்டுமின்றி விவசாய நிலங்கள் அனைத்தும் தண்ணீர் இன்றி வறண்டு பாளம் பாளமாக வெடித்து காட்சியளிக்கிறது.
கடும் வரட்சியால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளை காக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.






