• Mon. Aug 17th, 2026
WhatsAppImage2026-08-13at1759153
previous arrow
next arrow
Read Now

வெறும் சினிமா வசனம் போல பேசிவிட்டு செல்வதல்ல அரசின் நிர்வாகம்-ஆர்.பி. உதயகுமார்.,

ByKalamegam Viswanathan

Aug 17, 2026

மதுரையில் ஒரு லாக்கப் டெத் மரணம்; அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. பார்க்கிங் பிரச்சனை குறித்து சிந்தாமணி ஸ்டேஷனில் புகார் கொடுத்த சிவனடியார் பரமசிவத்தை போலீஸ் தாக்கியதாக புகார் எழுந்து, தற்போது உடல்நலக் குறைவு ஏற்பட்டு, நேற்று முன் தினம் இரவு பரமசிவம் இறந்து போய்விட்டார். எஸ்ஐ உட்பட 5 போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதல்வர் விஜய்க்கு, பரமசிவம் போலீசார் தாக்கி உடல்நலக் குறைவு ஏற்பட்டு சிகிச்சையில் இருந்தபோது வீடியோ மூலம் மரண வாக்குமூலம் கொடுத்திருக்கிறார்.

அதில் நான் எந்த தப்பும் செய்யவில்லை; அடிதடி பிரச்சனை என்று கூறி காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று, போலீசார் விசாரணையின் போது வேண்டுமென்றே என் மண்டையிலே அடித்ததில் ரத்தம் கசிந்து உறைந்து போய் வாந்தி வாந்தியாக வருகிறது; என் உயிருக்கு ஏதாவது ஒன்றால் அந்த 5 பேர்தான் போலீசார் தான் காரணம் என தெரிவித்துள்ளார்.

கடந்த ஆட்சியில் திருப்புவனம் லாக்கப் டெத் அஜித்குமார் மரணத்திற்கு இன்னும் நம் நெஞ்சிலே பசுமையாக நினைவு இருக்கிறது; சாரி வேண்டாம், சிஎம் சார், நீதி வேண்டும் என வீர முழக்கமிட்டார் விஜய்.

ஜோசப் விஜய் ஆகிய நான் என்று விஜய் முதல்வராக பொறுப்பேற்று இந்த 100 நாட்களிலே தமிழகத்தில் எத்தனை லாக்கப் டெத் மரணங்கள், நாகர்கோவிலில் குட்கா வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட மாற்று திறனாளி
சபரிவர்மன் மரணம், மாநிலத்தையே உலுக்கியது. இந்த அதிர்ச்சியிலிருந்து தமிழ்நாட்டு மக்கள் மீள்வதற்குள் தூத்துக்குடியிலே சட்ட விரோதமாக மது விற்றதாக கூறி விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட டாஸ்மார்க் ஊழியர் அருணாச்சலம் காவல்துறையால் தாக்கப்பட்டு, தலையில் காயம் அடைந்து உயிரிழந்தார். அதோடு புழல் சிறையில் வைக்கப்பட்டிருந்த பாலாஜி என்பவர் மரணம் தொடர்ந்து, சென்னையைச் சேர்ந்த ஓட்டுனர் வெங்கடேசன் என்பவர் காவல்துறையின் சித்திரவதையால் உயிரிழந்திருக்கிறார்.

லாக்கப் டெத் மரணங்களை எதிர்த்து கடுமையாக குரல் எழுப்பி வந்த முதல்வர் விஜய், இந்த 100 நாள் தன்னுடைய ஆட்சியில் லாக்கப் மரணங்களுக்கு வாய் திறக்க மறுப்பது ஏன்? மௌனம் கடைப்பிடிப்பதின் மர்மம் என்ன?

கடந்த ஆட்சியில் லாக்கப் மரணம் அடைந்த 24 பேரின் மரணம் தொடர்பாக வெள்ளை அறிக்கை உடனடியாக வெளியிட வேண்டும்; கொடூர சம்பவம் இனி ஒருபோதும் நடைபெறாது என்று உள்துறையை கையில் வைத்திருக்கிற முதல்வர் ஸ்டாலின், தமிழக மக்களுக்கு உடனடியாக உறுதியும் உத்தரவாதமும் அளிக்க வேண்டும் என 2025 ஆம் ஆண்டு தவெக தலைவராக இருந்த அன்றைய தவெக கட்சியின் தலைவர், இன்றைய தமிழகத்தின் முதல்வர் விஜய் கொடுத்த அறிக்கையை நாம் இங்கே நினைவு கூர்ந்து பார்க்கிறோம்.

அதோடு இன்றைக்கு கோவையில் கல்லூரி மாணவர் அமுதன் கொலையை தொடர்ந்து தமிழ்நாட்டிலே ஒரே நாளிலே மூன்று மாணவர் படுகொலைகள் நடந்துள்ளன.

; சென்னை திருவெற்றியூர் பகுதியைச் சேர்ந்த வெங்கடேசன் மகன் தனுஷ், அஜாக்ஸ் பேருந்து நிலையத்தின் பின்புறம் உள்ள காலி மைதானத்தில் பழுத்த காயமுடன் உயிரிழந்த நிலையில் கிடந்தார். சென்னை மெரினா கடற்கரையில் அண்ணா நீச்சல் குளம் பின்பகுதி இளைஞர் ஒருவர் தலை உட்பட உடல் முழுவதும் பலத்த காயங்களோடு கொலை செய்யப்பட்டு, பிணமாக கிடந்தது அதிர்ச்சி அளித்தது. அதேபோல திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியை அடுத்துள்ள சாணாபுத்தூர் கிராமத்தில் வசித்த ஒரு கூலித்தொழிலாளர் ராஜா என்பவரின் மூத்த மகன் ரஞ்சன், கிராமத்தின் வீட்டின் அருகே தனியார் வயல்வெளியில் கொலை செய்யப்பட்டு இரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார்.

இதெல்லாம் நாம் 80வது சுதந்திர தினம் கொண்டாடுகிற நாளில் 14 ஆம் தேதி நடைபெற்ற இந்த மூன்று மாணவர்கள் கொலைகள், ஜென்சி தலைமுறை விஜய் என்ன சொன்னாலும் கண்ணை மூடிக்கொண்டு கடலில் குதிக்கிற ஜென்சி தலைமுறை மூன்று பேரை நாம் இழந்துவிட்டோம். விஜய்க்கு வாக்களித்தவர்கள் அவர்தான் நம்மை வாழ வைக்க வந்த கடவுள் என்று அவதாரம் என்று வாழ்ந்து கொண்டிருக்கிற ஜென்சி தலைமுறையை பாதுகாக்க முதல்வர் இன்னும் வாய்திறக்கவில்லை.
ஒருவேளை சட்டசபையில் வேண்டுமானால் அவர் வாய் திறக்க வாய்ப்பு இருக்கிறது.

கடந்த கால ஆட்சியில் லாக்கப் மரணத்திற்கு எங்கள் ஆட்சி அமைந்தால் காவல் நிலைய அத்துமீறல்கள் அறவே இருக்காது. காவல்துறை சீர்திருத்தப்படும் என்று வசீகர வசனம் பேசிய முதல்வர் விஜய்யின் கையில்தான் இன்று காவல்துறை இருக்கிறது என்பது எல்லோருக்கும் தெரியும்.

ஒருவேளை காவல்துறை கையிலே வந்த பிறகு இந்த வசீகர வசனத்தை முதல்வர் தனக்கு வசதியாக மறந்துவிட்டாரோ என்னவோ தெரியவில்லை. லாக்கப் மரணங்களை எதிர்த்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்திய அப்போதைய தவெக தலைவர் விஜய் முதல்வராகவும் ,தவெக கட்சியினரும் இப்போது அமைச்சராகவும் இருக்கிறார்கள். தமிழ்நாட்டு மக்கள் எதிர்பார்ப்பதெல்லாம் அடுத்த ஒரு லாக்கப் டெத் மரணம் தமிழ்நாட்டில் நடக்காமல் இருக்க என்ன அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப் போகிறார்கள் என்பதை சட்டசபையிலே அறிவிப்பார்களா? நீங்கள் எடுக்கப்போகும் அதிரடி நடவடிக்கைகளை எதிர்பார்த்து அன்னை தமிழகம் கண்ணீரோடு கவலையோடு அதிர்ச்சியிலே காத்திருக்கிறது.

இன்றைக்கு 100வது நாளில் ஒரு யுகத்திற்கான மக்களின் மனசாட்சி என்று 100 நாட்கள் சாதனை பட்டியில் தவெக அரசு வெளியிட்டு இருப்பது மகிழ்ச்சி. அதோடு வேதனை பட்டியிலும் முதல்வர் விஜய் கவனத்திலே எடுத்துக் கொள்வாரா? என்பதுதான் தமிழக மக்களின் கவலை.

மேகதாது அணை பிரச்சனை, காவேரியில் தண்ணீர் திறந்துவிடவில்லை, பயிர் கடன் முழுமையாக தள்ளுபடி செய்யவில்லை, குறுவை சாகுபடி பொய்த்து போய் வறட்சி ஏற்பட்டிருக்கிறது, இந்த 100 நாட்களில் 22000 கோடி கடன் வாங்கி இருக்கிறார்கள், இதுவரை ஐந்து லாக்கப் டெத் மரணம், மௌனத்தில் கடந்து போய்க்கொண்டிருக்கிறது
அரசு.

கோவை கல்லூரி மாணவர் அமுதன் உட்பட இந்த 100 நாட்களிலே பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட 300க்கும் மேற்பட்ட படுகொலைகள், அறிவிக்கப்படாத மின்சார கட்டண உயர்வு, அறிவிக்கப்படாத சொத்து வரி உயர்வு, பஸ் கட்டண உயர்வு, பால்விலை உயர்வோடு பால் விநியோக தட்டுப்பாடு, மொத்தத்திலே தூய்மையான ஆட்சி என்று சொன்னவர்கள் இன்றைக்கு ஊழல் கதவை திறந்து வைத்திருக்கிறார்கள். தவெகஅமைச்சர்கள் என்கிற அதிர்ச்சி செய்தியும் இன்றைக்கு முதல்வர் கவனத்தில் இருக்கிற வந்திருக்கும் என்று நம்புவோம்.

ஆகவே வெறும் சினிமா வசனம் போல பேசிவிட்டு செல்வதல்ல அரசின் நிர்வாகம். இது வசனத்தை தாண்டி ஒவ்வொரு நிலையிலும் நாம் அக்கறை செலுத்தினால் மட்டுமே, கவனம் செலுத்தினால் மட்டுமே, கண்காணித்தால் மட்டுமே மக்கள் எதிர்பார்த்த மாற்றம் நிகழும். இல்லையென்றால் ஏமாற்றம் தான் மிஞ்சும் என கூறினார்.