திமுகவை அழிக்க நினைத்தவர்கள் அழிந்து போயுள்ளனர். திமுக அழிந்ததாக வரலாறு இல்லை என அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் இல்ல திருமண விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார்.
தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் இல்ல திருமண விழா இன்று சென்னை திருவான்மியூரில் நடைபெற்றது. இதில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார். அப்போது, பேசிய முதல்வர் ஸ்டாலின்;- இந்த திருமண மண்டபத்தில் நம்முடைய வீட்டு திருமணம் நடப்பதை போல் எண்ணி நாம் எல்லாம் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தி உள்ளோம். இன்னொரு பக்கத்தில் ஒரு திருமண மண்டபத்தில் என்ன நடக்கிறது என்பது உங்களுக்கு தெரியும். அந்த பிரச்சனைக்கு நான் போக விரும்பவில்லை.அதில் தலையிட வேண்டிய அவசியமில்லை. திமுகவை அழிக்க நினைத்தவர்கள் அழிந்து போயுள்ளனர். திமுக அழிந்ததாக வரலாறு இல்லை.
இந்த உணர்வோடு நாம் இருக்கிறோம் என்றார். மேலும், பேசிய முதல்வர் இது ஒரு சீர்திருத்தத் திருமணமாக – சுயமரியாதை உணர்வோடு நடைபெறும் திருமணமாக – இன்னும் நாம் பெருமையோடு பேசிக் கொண்டிருக்கிறோமே, ‘திராவிட மாடல்’-இல் நடைபெறும் திருமண விழாவாக இந்தத் திருமண நிகழ்ச்சி இங்கே நிறைவேறியிருக்கிறது. ஒற்றை தலைமை விவகாரம் ஸ்ரீவாரி திருமண மண்டபத்தில் அதிமுக பொதுக்குழுவில் பூதாகரமாக வெடித்துள்ள நிலையில் அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் இல்ல திருமண விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் இவ்வாறு பேசியுள்ளார்.