


கோவை கலிங்கநாயக்கன்பாளையம் பகுதியில், கணவரை இழந்த நிலையில் தனியாக வசித்து வரும் ராணி என்ற 70 வயது மூதாட்டி தனது விடா முயற்சியால் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் வெற்றி பெற்று உள்ளார். வயது ஒரு தடையல்ல என்பதை நிரூபிக்கும் வகையில், அவர் தனிப்பட்ட முறையில் தேர்வெழுதி 346 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி அடைந்து உள்ளார். இந்த சாதனை பலருக்கும் ஊக்கம் அளிப்பதாக உள்ளது.

ராணி தமிழ், ஆங்கிலம், வரலாறு, பொருளியல், வணிகவியல் மற்றும் கணக்குப் பதிவியல் ஆகிய பாடங்களில் தேர்வெழுதினார். ஒவ்வொரு பாடத்திலும் தேர்ச்சி பெற்று உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ராணி எந்த கோச்சிங் சென்டருக்கும் செல்லாமல் தானாகவே தனியாக படித்து தேர்வுக்கு தயாராகி பொதுதேர்வு எழுதி உள்ளார். மேற்கொண்டு யோகா இளங்கலை மற்றும் நேச்சுரோபதி படிக்க விருப்பப்படுவதாக தெரிவித்து உள்ளார். இந்த வயதிலும் கல்வியின் மீது அவர் கொண்ட ஆர்வத்தையும், முயற்சியையும் பலரும் பாராட்டி வருகின்றனர்.
இந்த செய்தி சமூக வலைத் தளங்களில் வைரலாக பரவி வருகிறது. பலரும் ராணிக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அவரது இந்த சாதனை மற்றவர்களுக்கும் ஒரு எடுத்துக்காட்டாக அமைந்து உள்ளது.



